பேராசிரியர் NVS பாராட்டு விழா
ஆகஸ்ட் 15, 2015 அன்று NVS என்று மாணவர்களால் அன்போடு அழைக்கப்படும் பேராசிரியர் N. வெங்கடசுப்பிரமணியன் அவர்களுக்கு ஒரு பாராட்டு விழா Mahwah (New Jersey) இந்து சமாஜ் ஆலய சமுதாய அரங்கில் நடைபெற்றது. இவர் சென்னை விவேகானந்தா கல்லூரியில் வேதியல் பேராசிரியாகவும், துறைத்தலைவராகவும் இருந்தார். பின்னர் 1973-81 காலகட்டத்தில் முதல்வராகப் பணியாற்றினார். தமது கல்லூரியில் ஆராய்ச்சித் துறையை ஏற்படுத்தியதோடு தாமே ஆராய்ச்சிசெய்து 175க்கும் மேற்பட்ட பன்னாட்டு அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

பேராசிரியரின் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் NVS குடும்பத்தினரோடு பங்கேற்றார். இவரது மூத்தமகன் ரமணியின் துணைவியார் ராதா, தன் மகன் ராஜீவுடன் சேர்ந்து ஒலித்த வேதகோஷத்துடன் விழா தொடங்கியது. டாக்டர் பஞ்சாட்சரம் நிகழ்ச்சிகளைச் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

மூத்த மாணவர் டாக்டர். அனந்தசுப்ரமணியன் விழாவிற்கு மூலகாரணமாக இருந்தோருக்கு நன்றி கூறித் தமது முன்னுரையை வழங்கினார். வேதியல் துறையின் பொற்காலத்தை உருவாக்கப் பேராசிரியர் அடித்தளம் அமைத்ததை நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தார். தொடர்ந்து டாக்டர். கோவிந்தன், NVS அவர்களின் கல்வி, தொழில், ஆராய்ச்சிரீதியான சாதனைகளை எடுத்துச் சொன்னார். 56 மாணவர்களின் அனுபவங்கள், புகைப்படங்கள் அடங்கிய 'Our Teacher – Our Inspiration' என்ற விழாமலரை வெளியிட்டார். டாக்டர். பஞ்சாட்சரம் 1971-74 ஆண்டுகளில் கல்லூரி இளநிலை வேதியல் பட்டம் படித்த மாணவர்கள் தொடங்கிய Vivechem Trust அமைப்பை அறிமுகப்படுத்தினார். இதுவரை 3.5 லட்சம் ரூபாய் சேர்த்துள்ளதையும், அதன்மூலம் வரும் வருமானத்தை, தகுதி மற்றும் தேவை அடிப்படையில் வேதியல்துறை மாணவர்களுக்கு உதவிட இருப்பதாகக் கூறினார். வந்திருந்த மாணவர்கள் தமது அனுபவங்களையும், பேராசிரியரின் உயரிய பண்புகளையும் பகிர்ந்துகொண்டனர். நன்றியின் அடையாளமாக மலர்ச்செண்டையும் காசோலையையும் முனைவர் ஸ்ரீகாந்தும் துணைவியாரும் பேராசிரியரிடம் கொடுத்தனர்.

பேராசிரியர் தன் ஏற்புரையில் தைத்ரீய உபநிஷத்திலிருந்து மேற்கோள் காட்டி, ஓர் ஆசிரியன் தன் மாணவரிடமிருந்து இரண்டை எதிர்பார்ப்பதாகக் கூறினார். ஒன்று, தான் சேகரித்த அறிவையும், ஆற்றலையும் மீண்டும் ஆசானிடம் கொண்டுவருதல்; இரண்டாவது, தான் படித்த பள்ளியின் பாரம்பரியத்தைக் கடைப்பிடித்து நிலைநிறுத்துதல். இந்த இரண்டையும் செவ்வனே செய்கிற மாணவர்களைப் பாராட்டினார். ஒரே நேரத்தில் தனது எட்டு மாணவர்கள் வாண்டர்பில்ட் பல்கலைக்கழகக் கரிமவேதியல் துறையில் (Dept of Organic Chemistry) ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்ததைப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

விழாவைச் சிறப்பாக நடத்திக்கொடுத்த ஒருங்கிணைப்பாளர்களுக்கும் மாணவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பேராசிரியரின் புதல்வர் வெங்கடரமணி நன்றி தெரிவித்து விழாவை நிறைவு செய்தார்.

© TamilOnline.com