வடகரோலினா: பிக்னிக்
ஆகஸ்ட் 2, 2015 அன்று வடகரோலினா தமிழ் கலாசார சங்கம் ஏற்பாடு செய்திருந்த வருடாந்திர பிக்னிக் ராலே வீலர் பார்க்கில் சிறப்பாக நடந்தது. மதிய உணவு 12.30மணி முதல் பரிமாறப்பட்டது. பல்வேறு உணவுவகைகள் தவிர, தோசை அங்கேயே சுட்டு பரிமாறப்பட்டது. மறைந்த அணுசக்தி நாயகன் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கட்கு அஞ்சலியுடன் பிக்னிக் தொடங்கியது. ராஜன் சோமசுந்தரம் மற்றும் மஹா மாணிக்கம் இருவருடைய கீதாஞ்சலியும், திரு. சங்கர் குமாரின் கவிதாஞ்சலியும் கலாம் அய்யாவுக்கு மரியாதை செலுத்தின. மதிய உணவுக்குப் பிறகு சிறாருக்கும் பெரியோருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. பலூன் பந்தயம், சாக்குப் பந்தயம், நொறுக்குத்தீனி உண்ணுதல் எனப் போட்டிகளில் அனைவரும் உற்சாகமாகப் பங்கேற்றனர். குழந்தைகளுக்கு பேக்கிங் (ரொட்டி சுடுதல்) போட்டியும் நடந்தது. மாலை கமகம தேநீருக்குப் பின் 30 நிமிட நடன நிகழ்ச்சியோடு பிக்னிக் நிறைவெய்தியது.

ஸ்ரீவித்யா ஜெயராம்,
கேரி, நார்த் கரோலினா

© TamilOnline.com