ஆதியோகி - உலகின் முதல் யோகி
(செப்டம்பர் 23 அன்று டென்னசி மக்மின்வில்லில் உள்ள ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆப் இன்னர் சயன்ஸ் வளாகத்தில் ஆதியோகி என்ற 30,000 சதுர அடியிலமைந்த யோக நிலையத்தை சத்குரு அவர்கள் தமது கையால் பிராணபிரதிஷ்டை செய்துவைப்பார்கள். அதனை முன்னிட்டு இக்கட்டுரை வெளியாகிறது.)

பண்டைய காலத்தில், இந்தியா தனியொரு நாடாகவோ, அங்கிருந்த மக்கள் ஒரேயொரு மதம், இனம் அல்லது மொழியைச் சார்ந்தவர்களாகவோ இருக்கவில்லை. இருப்பினும் அந்தத் துணைக்கண்டம் முழுவதும் மனிதர்கள் கொண்டிருந்த ஆன்மீக நற்பண்பின் காரணமாக நல்லிணக்கம் நிலவியது. இந்த அடிப்படை ஆன்மீக உணர்வின் காரணமாக, அங்கு வாழ்ந்த ஒவ்வொருவருக்கும், பாமரனாயிருந்தாலும் சரி, பார்வேந்தனாக இருந்தாலும் சரி, வாழ்வின் உச்சபட்ச இலக்கு 'முக்தி' என்பதாகவே இருந்தது. இதற்கெல்லாம் முழுமுதற் காரணமாக அமைந்தவர் சிவன். பின்வரும் கதையில் சத்குரு அவர்கள் ஆதியோகியாம் சிவனைப்பற்றியும், அவர் சப்தரிஷிகளுக்கு யோக அறிவியலைப் பரிமாறிய விதத்தையும் கூறுகிறார்...

யோகக் கலாசாரத்தில் சிவன் கடவுளாக அறியப்படுவதில்லை. மாறாக ஆதியோகியாக, யோகத்தைப் பிறப்பித்தவராக அறியப்படுகிறார். மனித மனத்தினுள் முதன்முதலாக இந்த விதையை விதைத்தவர் அவர்தான். யோக மரபின்படி 15,000 ஆண்டுகளுக்கும் முன்பாக சிவன் பூரண ஞானமடைந்து, இமயமலையிலே தீவிரமான பரவச நிலையில் மூழ்கினார். பரவசநிலை எப்போதெல்லாம் அவரை அசைய அனுமதித்ததோ, அப்போதெல்லாம் கட்டுக்கடங்காத தாண்டவரூபமாக வெளிப்பட்டார். பரவசம் மிகுந்து, அசையும் நிலையையும் தாண்டியபோது, அசைவற்ற நிச்சல ரூபமாக வெளிப்பட்டார்.

இதைக் கண்டவர்கள் தம் அறிவுக்கு புலப்படாத ஒன்றை இவர் அனுபவிக்கிறார் என்றுமட்டும் புரிந்து கொண்டார்கள். ஆர்வம் வளர்ந்தது. அதைத் தாமும் அனுபவிக்க விரும்பினார்கள்; அவரோ தன்னைச் சுற்றிப் பலர் இருப்பதைத் துளியும் கவனிக்கவில்லை. ஒன்று தீவிர தாண்டவம், அல்லது முற்றிலும் அசைவற்ற நிலை. விரைவிலேயே பலர் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். ஏழு பேரைத் தவிர!

ஏழுபேரும் அவருக்குள் பொதிந்திருக்கும் பொக்கிஷத்தைத் தாங்களும் அடையவேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தனர். ஆனால் சிவனோ, அவர்களை முழுமையாகப் புறக்கணித்தார். அவர்கள் கெஞ்சினார்கள், மன்றாடினார்கள். சிவனோ, "மூடர்களே! நீங்கள் இப்போதிருக்கும் தன்மையில், கோடி வருடங்கள் ஆனாலும் இதை உணர மாட்டீர்கள், இதற்கு மாபெரும் அளவில் உங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இது விளையாட்டல்ல" என்று நிராகரித்தார். அவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

நாட்கள் உருண்டோடி வருடங்களாயின. அவர்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள். இப்படி 84 வருடங்கள் உருண்டோடின. ஒரு பௌர்ணமியன்று, சூரியன் உத்தராயணத்திலிருந்து தக்ஷிணாயணத்திற்கு மாறியபோது, ஆதியோகி இந்த ஏழுபேரின் மீதும் அருட்பார்வையைச் செலுத்தினார். அவர்கள் ஞானத்தை ஏந்திக்கொள்ளத் தகுதியுடையவர்களாக மிளிர்வதை கவனித்தார். அதன்பின்னும் புறக்கணிக்க இயலவில்லை. ஆதியோகியின் பார்வை அந்த 7 பேரின்மீது பட்டது. அடுத்த பௌர்ணமியன்று, அவர்களது மனவிருளை அகற்றி, குருவாகி அருள்புரிய முடிவு செய்தார். ஆதியோகி தன்னை ஆதிகுருவாக்கி அருளினார்.அந்த முழுமுதற் குரு தோன்றிய தினத்தைத்தான் நாம் குருபௌர்ணமியாகக் கொண்டாடுகிறோம்.

காந்திசரோவர் ஏரிக்கரையில் ஆதிகுரு தென்திசை நோக்கி அமர்ந்து, மனிதகுலத்தின்மேல் அருளைப் பொழிந்தார். கேதார்நாத் திருத்தலத்திற்கு மேலே, சில கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த நீர்ப்பரப்பின் கரையில்தான் அந்த எழுவருக்கு ஆதிகுரு முதன்முதலாக யோக விஞ்ஞானத்தைப் பரிமாறினார். இந்த யோக விஞ்ஞானம் என்பது உடலை வளைப்பது அல்லது மூச்சைப் பிடித்துவைப்பது பற்றிக் கிடையாது. அது ஒரு மனிதனுடைய அமைப்பு முழுவதும் எப்படியெல்லாம் இயங்குகிறது என்ற நுணுக்கங்களை உணர்ந்திடும் விஞ்ஞானம்.

இந்த யோக விஞ்ஞானத்தை எழுவருக்கும் ஆதிகுரு பரிமாறிய செயல் பல ஆண்டுகளுக்குப் பின் முழுமைபெற்றது. இதன்மூலம் ஏழு பூரண ஞானிகள் உருவாகினர். அவர்களை சப்தரிஷிகள் என்று போற்றுகிறோம். சிவன் இந்த எழுவரில் ஒவ்வொருவருக்கும் யோகத்தின் வெவ்வேறு அம்சங்களை உட்புகுத்தினார். இவர்களால் ஏழு தனிப்பட்ட யோக வடிவங்கள் இன்றும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆதியோகி இவர்கள் எழுவரையும் உலகின் வெவ்வேறு மூலைக்குச் சென்று யோக விஞ்ஞானத்தை வழங்குமாறு பணித்தார்.

இவர்களில் ஏழாமவர் இந்திய தீபகற்பத்தின் தென்பகுதிக்கு வந்தார். இவர்தான் அகஸ்திய முனிவர். ஆன்மீக வழிமுறையை வாழ்வின் தினசரி அங்கமாக மாற்றினார். அவர் வழங்கிய முறைகளைப் பின்பற்றித்தான் தீப்பிழம்புகள் போல நூற்றுக்கணக்கான யோகிகள் இந்தியாவில் தோன்றினர். ஓர் இந்தியக் குடும்பத்தை கூர்ந்து கவனித்தால், அவர்கள் அமரும் விதம், உண்ணும் விதம் உட்படப் பாரம்பரியத்தின் பெயரால் வாழ்வில் அவர்கள் செய்யும் எல்லாச் செயல்களுமே அகஸ்தியர் பதித்துப்போன முத்திரையின் சுவடுகள்தாம்.

"ஒருவர் மனித இனத்திற்கென வரையறுக்கப்பட்ட கட்டுக்களில் அடைபட்டே கிடக்கவேண்டிய கட்டாயம் இல்லை. அதற்கப்பால் கடந்து செல்ல முடியும்" என்ற சாத்தியத்தை முதன்முதலாக உருவாக்கியது ஆதியோகியே! இந்த உடலில் வசிக்கலாம், ஆனால் உடலாகவே ஆகிவிடாமல் இருக்கலாம். இதற்கொரு வழி உண்டு; இந்த மனத்தை உச்சபட்சத் திறனுக்கு பயன்படுத்திடலாம், அதேசமயம் மனதில் துயர் துளியும் இல்லாதபடி வாழலாம். இதற்கொரு வழி உண்டு...

இப்போது நீங்கள் இருப்பின் எந்தப் பரிமாணத்தில் இருந்தாலும் சரி, அதைக் கடந்து போகமுடியும். வேறுவிதமாக வாழ வழியுள்ளது. ஆதியோகி இதைத்தான் சொன்னார், "நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ளத் தயாராக இருந்தால், அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தால், நீங்கள் இப்போது கட்டுண்டு இருக்கும் எல்லைகளைக் கடந்து, பரிமாண வளர்ச்சியில் மேலெழுந்திட முடியும்." இன்றியமையாதவர் அல்லவா ஆதியோகி!

வலைமனை: www.AdiYogi.org;
பதிவுக்கு: registration@adiyogi.org;
தொலைபேசி: 931-300-2425

© TamilOnline.com