"உங்களுக்காக 6 மணிநேரம் நான் நிற்பேன்"
நாங்கள் ஷில்லாங்குக்குப் போய்க்கொண்டிருந்தோம். டாக்டர். கலாம் அங்கே IIM மாணவர்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்தார். குவாஹட்டி விமான நிலையத்திலிருந்து ஷில்லாங்குக்குக் காரில் போனோம். நானும் டாக்டர். கலாமும் இருந்த கார், அணிவகுத்துச் சென்ற ஆறேழு கார்களில் இரண்டாவதாக இருந்தது. முதல் கார் திறந்திருந்த ஒரு ஜிப்சி. அதில் மூன்று படைவீரர்கள். இருவர் உட்கார்ந்திருக்க நடுவிலிருந்த மெலிந்த தேகம் கொண்டவர் மேலே துப்பாக்கி ஏந்தியபடி நின்றுகொண்டிருந்தார்.

ஒருமணி நேரம் பயணித்திருப்போம். "அவர் ஏன் நிற்கிறார்? களைப்பாகிவிடும். இது என்ன தண்டனை? வயர்லெஸில் கூப்பிட்டு அவரை உட்காரச் சொல்" என்றார் கலாம். பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரை நிற்கச் சொல்லியிருப்பார்கள் என்று கூறிச் சமாதானப்படுத்த முயன்றேன். அவர் கேட்பதாயில்லை. ரேடியோவில் அழைத்துச் சொல்ல முயன்றோம், அதுவும் முடியவில்லை. அடுத்த ஒன்றரை மணிநேரத்தில் கலாம் என்னிடம் "நீ அவரை உட்காரச் சொல்லிக் கைகாட்டிச் சைகை செய்" என்று மூன்றுமுறை நினைவூட்டினார்.

இதில் எதுவும் பலிக்காது என்பதைக் கடைசியாகப் புரிந்துகொண்ட அவர், "நான் அவரைப் பார்த்து நன்றி சொல்ல விரும்புகிறேன்" என்றார்.

நாங்கள் ஷில்லாங் IIM வளாகத்தை அடைந்தோம். அங்கு காவலுக்குப் பொறுப்பேற்றிருந்தவர்களைச் சந்தித்து நின்றுகொண்டே வந்த வீரரைக் கண்டுபிடித்தேன். அவரை அறைக்குள் அழைத்துச் சென்றேன். டாக்டர் கலாம் அவரை வரவேற்றுக் கைகுலுக்கி, "நன்றி நண்பா!" என்றார். "உனக்குக் களைப்பாகிப் போனதா? ஏதாவது சாப்பிடுகிறாயா? என்பொருட்டாக நீ அத்தனை நேரம் நிற்க நேர்ந்ததற்கு வருத்தப்படுகிறேன்" என்றார்.

இந்த உபசரிப்பில் ஆச்சரியமடைந்த, கறுப்பு உடையணிந்த அந்த மெலிந்த வீரருக்குச் சொல்ல வார்த்தை எழவில்லை. "சார், உங்களுக்காக நான் ஆறுமணி நேரமானாலும் நிற்கத் தயார்" என்றுமட்டும் கூறினார்.

(முகநூலில் வெளியான ஆங்கிலப் பதிவின் தமிழாக்கம்)

ஸ்ரீஜன் பால் சிங்

© TamilOnline.com