அமிலம் போடும் ஆட்டம்!
ஆங்கிலத்தில் 'Heart burn' என்று சொல்லப்படும் நெஞ்சுக் கரிப்பு பலருக்கு இருக்கலாம். சிலருக்கு உணவு உண்டதும் பல மணி நேரத்துக்கு வயிற்றுப் பகுதியின் மேலிருந்து தொண்டை வரை எரிச்சல் ஏற்படலாம். அல்லது ஜீரணம் ஆகாத உணவு தொண்டையில் இலேசாக எட்டிப் பார்க்கலாம். வயிறு உப்பியது போல் உணரலாம். மேல் வயிற்றுப் பகுதியில் மிகுந்த வலி ஏற்படலாம். அதிக நேரம் பட்டினி கிடந்தாலோ, அதிகம் சாப்பிட்டாலோ இது போல் ஏற்படலாம். நாளாக நாளாகத் தினமும் ஏற்படலாம். இவை யாவும் வயிற்றில் சுரக்கும் அமிலத்தினால் ஏற்படக் கூடிய விளைவுகள்.

அதிகமாக அமிலம் சுரப்பதினால் (hyper acidity) ஏற்படும் உபாதைகளை இப்போது காணலாம். நாம் உண்ணும் உணவைச் செரிமானம் செய்வதற்காக இரைப்பையில் அமிலம் சுரக்கிறது. இந்த அமிலம் செரித்த உணவு அங்கிருந்து சிறு குடல் மற்றும் பெருங்குடலுக்குப் போகிறது. அமிலம் அதிகமாகச் சுரந்தாலோ அல்லது செரிமானம் செய்யப் போதுமான உணவு இல்லாது போனாலோ வயிற்றில் உள்ள தசைகளை இந்த அமிலம் அரிக்கலாம். இதனால் 'ulcer' என்று சொல்லப்படும் வயிற்றுப் புண் உருவாகலாம். சிலவகை உணவுப் பொருட்கள் இந்த அமிலத்தை அதிகமாகச் சுரக்க வைக்கின்றன. இதைத் தவிரச் சில பழக்கங்கள் இந்த அமிலத்தைக் குறைக்கவோ அதிகமாக்கவோ செய்யலாம். நமது வயிற்றில் இந்த அமிலத்தைக் கட்டுப்படுத்தச் சில பாதுகாப்பு முறைகளும் உள்ளன. என்றாலும் கூட இந்த அமிலத்தின் அளவிற்கும் பாதுகாப்புக் காரத்துக்கும் (alkali) இடையே சமச்சீர்நிலை இல்லாத போதும் வயிற்றுப்புண் ஏற்படலாம்.

Gastritis

வயிற்றில் புண் ஏற்படாமல் வெறும் அரிப்பு மட்டும் ஏற்பட்டு அதனால் வலி வருவதை Gastritis என்று சொல்வார்கள். இது குறுகிய காலத்திற்கு ஏற்படலாம். அதிக அளவில் மதுபானம், எண்ணெயில் செய்யப்பட்ட கார உணவுகள், ஒரு சில மருந்துகள் (Adivil, Motrin, Prednisone etc.) போன்றவை இந்தப் பிணியை உருவாக்கலாம். அப்போது மிகுந்த வலி அல்லது வாந்தி, குமட்டல் ஆகியவையும் ஏற்படும்.

Peptic ulcer / Duodenal ulcer

Gastritis அதிகமாகி வயிற்றில் புண் உண்டாகலாம். அதுவே பெப்டிக் அல்சர் என்று சொல்லப்படுகிறது. இது இரப்பையில் ஏற்பட்டால் Gastric ulcer என்று அழைக்கப் படும். இரைப்பையிலிருந்து வெளிவரும் சிறுகுடலின் ஆரம்பக் குழாய் duodenum என்று அழைக்கப்படும். இதில் புண் இருந்தால் இருந்தால் Duodenal ulcer என்று சொல்லப்படுகிறது.

தீராத அஜீரணம்

தொடர்ந்து வயிற்றுப் புண் இருந்தால் நாளாவட்டத்தில் ஒரு விதச் செரிமானச் சீர்கேட்டை உருவாக்கலாம். அப்படி ஏற்படும் Chronic indigestion என்பதை GERD (Gastroesophageal Reflux Disease) என்று சொல்கிறோம். இது வயிறு உப்புசம், வாந்தி, குமட்டல், நெஞ்சு அடைப்பு, உணவுக் குழாயில் உணவு சிக்கிக் கொள்வது போன்ற உணர்வு, தீராத வறட்டு இருமல் போன்ற உபாதைகளை ஏற்படுத்தலாம். GERD என்று சொல்லப்படும் நிலை உருவாகாமல் தடுப்பது நல்லது. ஏனெனில் இந்த நிலை ஏற்பட்ட பின்னர் இதைக் கட்டுப்படுத்துவது கடினம். தினமும் மாத்திரை எடுத்துக் கொண்டாலும் இந்த உபாதைகளை அறவே ஒழிக்க இயலாமல் போகலாம்.

H.Pylori

H.Pylori என்று சொல்லப்படும் ஒரு கிருமி வயிற்றின் அமிலத்தை அதிகமாகச் சுரக்க வைக்கலாம். இந்தக் கிருமி peptic ulcer உருவாக்க ஏதுவாகலாம். ஆனால் peptic ulcer உள்ள எல்லோரிடமும் இந்த கிருமி காணப்படுவதில்லை. அதே நேரத்தில் ஆசிய நாடுகளில் இந்த கிருமி அதிகமாகப் பரவி இருப்பதால் நம்மில் பலரிடம் இந்தக் கிருமி ஒளிந்து கொண்டிருக்கக்கூடும். இந்த கிருமியை மூன்று மாத்திரைகள் கலந்த சிகிச்சை மூலம் 90% அழிக்க முடியும். பிற்காலத்தில் வயிற்றில் Lymphoma என்று சொல்லப்படும் ஒரு விதப் புற்று நோய் ஏற்பட இந்தக் கிருமி காரணமாகலாம்.

கண்டு பிடிப்பு முறைகள்

பெரும்பாலும் இந்த நோயைக் கண்டு பிடிக்கப் பரிசோதனைகள் தேவையில்லை. ஒரு சில அறிகுறிகள் இருந்தால் Endoscopy மூலம் உணவுக்குழாய்ப் பரிசோதனை செய்யவேண்டி வரலாம். Barium swallow அல்லது PH Monitor போன்ற பரிசோதனைகளும் தேவைப்படலாம். இந்த H.Pylori கிருமியை இரத்தப் பரிசோதனை மூலமும் மூச்சுக்காற்றுப் பரிசோதனை மூலமும் கண்டு பிடிக்கலாம். அவரவர் முதன்மை மருத்துவரிடமே (Primary Care Provider) இந்த நோய்க்குச் சிகிச்சை பெறலாம். தேவைப்பட்டால் மருத்துவர் சீரண உறுப்புகள் மருத்துவருடன் (Gastroenterologist) ஆலோசிக்கலாம்.

சிகிச்சை முறைகள்

இந்த நோய்க்கான சிகிச்சை முறைகளை விவரமாகப் பார்ப்போம்.

வாழ்முறை மாற்றங்கள்

Life style changes என்று மருத்துவ உலகில் சொல்லப்படும் வாழ்முறை மாற்றங்கள் நோயைக் கட்டுப்படுத்த மிக முக்கிய மானவை. வேளா வேளைக்கு உண்ண வேண்டும். பசிக்கவில்லை அல்லது நேரமில்லை என்று காலையோ அல்லது மதியமோ உண்ணாமல் இருக்க கூடாது. முக்கியமாகக் காலை உணவு. நீண்ட நேரமாகப் பட்டினி கிடந்து உண்பதால்தான் அது Break Fast என்று வழங்கப்படுகிறது. இந்த அதிக நேரப் பட்டினி வயிற்றில் அமிலம் சுரக்க வைக்கும். போதாக்குறைக்கு காலையில் நாம் குடிக்கும் திடமான காபி அமிலத்தின் அளவை அதிகமாக்கும். அப்போது உடனே ஒரு வித வலியும் தோன்றாது போனாலும் நாளடைவில் இந்த உபாதைகள் எட்டிப் பார்க்கும். ஆக வேளாவேளைக்கு அளவுடன் உண்ண வேண்டும். ஒரு உணவைத் தவற விட்டுச் சேர்த்து வைத்து அடுத்த வேளை உண்பதும் நல்லதல்ல. அதிகமாக உண்டாலும் அமிலம் அதிகமாக சுரக்கும். இரவு உணவு உண்ட பின் குறைந்தது 2 மணி நேரத்துக்கு உறங்கக்கூடாது. நின்ற வாக்கிலோ அல்லது நடந்த வண்ணம் இருப்பதோ நல்லது. படுத்த வண்ணம் இருக்கக்கூடது. மதிய உணவிற்கு பின்னர் கூட உடலைச் சற்று சாய்க்கலாம் என்று படுப்பவர்களுக்கு இந்த நோய் அதிகமாகும்.

புகை பிடித்தல், மதுபானம் அருந்துத்தல் இந்த நோயை அதிகமாக்கும். மருந்துக் கடைகளில் மருத்துவரின் சீட்டு இல்லாமல் கிடைக்கும் வலி மருந்துகள் எல்லாமே இந்த நோயை அதிகமாக்கும். ஆகவே வலி மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் அளவுக்கு அதிகமாகாமல் கவனமாய் இருக்க வேண்டும். அதிகமான எடை இருப்பவர்களையும் இந்த நோய் பரவலாகத் தாக்குகிறது. ஆக எடைக் கட்டுப்பாடும் இந்த நோய் குணமாக அவசியம்.

அமிலக் கட்டுப்பாட்டு மருந்துகள்

Antacid என்று சொல்லப்படும் Mallox, Bismuth, Tums, Peptobismol போன்ற மருந்துகள் மருத்துவரின் சீட்டு இல்லாமலே கிடைக்கின்றன. இவை அமிலம் சுரந்தாலும் நமது தசைகளை அரிக்காமல் பாதுகாக்கின்றன.

அமிலம் சுரப்பதைக் குறைக்கும் மருந்துகள்

1. H 2 blockers: இவை Pepcid AC, Zantac, Ranitidine போன்ற மருந்துகள். இவையும் பெரும்பாலும் மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன. இவை அமிலத்தைக் குறைக்க வல்லன.

2. Proton Pump Inhibitor(PPI): இவை Prevacid, Prilosec, Nexium, Protonix என்று பல தரப்படும். இவை விலை உயர்ந்தவை. இவற்றில் பலவற்றிற்கு மருத்துவரின் சீட்டு அவசியம். இவை மிகவும் தீவிரமாகச் செயல்படுவன. ஒரு சிலருக்கு 1 அல்லது 2 மாத்திரைகளிலே தீர்வு கிடைக்கலாம். பலருக்குத் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கலாம். இன்னும் சிலருக்கு மருந்து எடுத்துக் கொண்டால் தீர்வும், நிறுத்தினால் வலியும் ஏற்படலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த மருந்துகளை உட்கொள்வது நல்லது.

எச்சரிக்கை!

கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை உடனே நாட வேண்டும்:

1. எடை குறைதல்

2. வாந்தியில் இரத்தம் கலந்திருத்தல்

3. மலத்தில் இரத்தம் கலந்திருத்தல். இது சிகப்பாகவும் இருக்கலாம், அல்லது மலமே கருப்பாகத் தோற்றம் அளிக்கலாம். செரிமானம் ஆன இரத்தம் கருப்பாக மாறிவிடும்.

4. அவரவர் நோயின் தன்மையில் மாற்றம் ஏற்படுதல் (Change in pattern of symptoms).

இந்த அறிகுறிகள் வயிற்று/குடல் புண்ணில் இருந்து இரத்தம் கசிவதையோ அல்லது புற்று நோய் உருவாகுவதையோ உணர்த்தக்கூடும்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com