மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி ஐ.நா. கருத்தரங்கில் சிறப்புரை
2015 ஜூலை 8ம் தேதி ஜக்கிய நாடுகள் கல்வித்துறை தாக்கம் (United Nations Academic Impact) மற்றும் அமிர்தா பல்கலைக்கழகம் இணைந்து "தொடர்முன்னேற்றத்திற்கான தொழில்நுட்பம்" பற்றிய கருத்தரங்கத்தை, நியூ யார்க்கில் உள்ள ஜக்கிய நாடுகள் சபையில் நடத்தின. 93 சர்வதேச பல்கலைக்கழகங்களில் இருந்து வந்த அறிவியலாளர்கள் பங்கேற்றனர். அமிர்தா பல்கலைக்கழகத்தின் வேந்தர் மாதா அமிர்தானந்தமயி தமது சிறப்புரையில் "உலகில் இரண்டு விதமான வறுமைகள் உண்டு. முதல்வகை, உணவு, உடுப்பு, தங்குமிடம் இல்லாமை. இரண்டாம் வகை, அன்பும், கருணையும் இல்லாமை. நாம் இதில் இரண்டாம்வகை வறுமையைத்தான் முதலில் தீர்க்கவேண்டும். நம்முள்ளே அன்பும், கருணையும் இருந்தால், உணவு, உடுப்பு, தங்குமிடம் இல்லாதவர்களுக்கு நாம் முழுமனதோடு உதவியும் சேவையும் செய்வோம்" என்றார்.

"கருணை என்பதை வெறும்வார்த்தையாக அல்லாமல், ஒரு செயல்முறைப் பாதையாக மாற்றியமைத்தால், உலகில் 90 சதவீத மனிதாபிமானப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண இயலும். பல்கலைக்கழகங்கள் மாணவர்களை வறுமையில் வாடும் கிராமங்களுக்கு அனுப்பி, அவர்களுக்குள் கருணை உணர்வை விழிப்புறச் செய்யவேண்டும்" என்றும் கூறினார்.

ஜூலை 1 முதல் 20ம் தேதிவரை, மாதா அமிர்தானந்தமயி சிகாகோ, வாஷிங்டன் டி.சி., பாஸ்டன், நியூ யார்க், டொரன்டோ (கனடா) ஆகிய இடங்களுக்கு வருகைதந்திருந்தார். அம்மா தம்மைக் காணவந்த அனைவரையும் பரிவோடு அரவணைத்து அளவற்ற அன்பை வழங்கினார். தினமும் ஆன்மீக சொற்பொழிவு, தியானம், பஜனை மற்றும் அம்மாவின் தரிசனம் நடைபெற்றன.

அம்மா ஆற்றும் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: www.EmbracingTheWorld.org

மேலும் விபரங்களுக்கு: www.amma.org

சூப்பர் சுதாகர்

© TamilOnline.com