அரங்கேற்றம்: ரோஹிதா பாஸ்கர்
ஜூன் 20, 2015 அன்று செல்வி. ரோஹிதா பாஸ்கரின் பரதநாட்டிய அரங்கேற்றம், அட்லாண்டா சுவானியில் உள்ள லேம்பெர்ட் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. அட்லாண்டாவில் நிருத்ய சங்கல்பா நாட்டியப்பள்ளியை நிறுவி, 15 ஆண்டுகளாகக் கலாக்ஷேத்ரா பாணியை கற்பித்துவரும் திருமதி. சவிதா விஸ்வநாதன், ரோஹிதாவின் குரு. ரோஹிதாவின் பெற்றோர் திருமதி. கீதா, திரு, பாஸ்கரின் வரவேற்புரையோடும், மாணவர் வருண் ஐயரின் அழகான தொகுப்புரையோடும் நிகழ்ச்சி ஆரம்பமானது.

"ஜய ஜானகி ரமண" என்ற தோடயமங்கள ராகமாலிகையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அடுத்து நட்டுவாங்கத்தோடு ஆரபி ராகம், ஆதி தாளத்தில் குதித்தோடி வந்த ஜதீஸ்வரத்தை அற்புதமான அடவுகளோடு அளித்தார் ரோஹிதா. பிரகதீஸ்வரரிடம், பூஜைகள் பல செய்தபோதும் பாராமுகமாக இருப்பதேன் என்று கேட்டு ஒரு பக்தை முறையிடுவதாக அமைந்த, சங்கராபரண ராக "மானவி சேக் கொன்ன" என்று தொடங்கும் வர்ணத்துக்குப் பலவித முகபாவங்களுடனும், முத்திரைகளுடனும் ஆடிக் கைதட்டல் பெற்றார். "சற்றே நில்லடி மனம் கல்லோடி" பதம், "சங்கர ஸ்ரீகிரி நாதப்பிரபோ" கிருதி, "எரா ரா ரா" ஜாவளி என்று ஒவ்வொன்றிலும் முத்திரை பதித்தார் ரோஹிதா. இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் இருந்தது அவர் விறுவிறுப்புடன் ஆடிய தில்லானா.

நிகழ்ச்சிக்கு வாய்ப்பாட்டு திருமதி. சுஜாதா ரேபர்ன் மற்றும் செல்வி. வீணா கணபதி, மிருதங்கம் திரு. சுப்ரா, புல்லாங்குழல் திரு, ராஜன், வயலின் திரு. பிரசாத், நட்டுவாங்கம் திருமதி. சவிதா. ரோஹிதா இதில் வரும் பரிசுத்தொகையைத் தமிழ்நாட்டில் ஆயக்குடி 'அமர் சேவாசங்கம்' (பார்க்க: தென்றல், மே 2007) தொண்டுநிறுவனத்துக்கு நன்கொடையாக அளிக்கவிருக்கிறார். ஏழு வயதுமுதல் 11 வருடங்களாக நடனம் பயின்றுவரும் இவர், பியானோ வாசிப்பிலும் தேர்ந்தவர். மருத்துவத்துறையில் படிப்பைத் தொடரவிருந்தாலும், பரதம் அவரது வாழ்வின் ஓர் அங்கமாக என்றும் மிளிரும் என்கிறார் ரோஹிதா.

ராஜி ராமச்சந்திரன்,
அட்லாண்டா

© TamilOnline.com