உங்கள் மனநிம்மதிக்கு அவள் பொறுப்பல்ல
அன்புள்ள சிநேகிதியே:

என்னுடைய பெண்ணரசி எனக்குத் தலையாய பிரச்சினை. எனக்கு ஒரு பையன். இரண்டு பெண்கள். இவள் வரிசையில் இரண்டாவது. மற்றவர்கள் இருவரும் நன்றாக செட்டில் ஆகிவிட்டார்கள். என்னுடைய நிம்மதியெல்லாம் இவளாலேயே இல்லாமல்போகிறது. எவ்வளவுக்கெவ்வளவு சின்னவயதில் இவளைப்பற்றி பெருமை கொண்டிருந்தோமோ அதற்கு நேர்மாறான நிலைமையில் இப்போது இருக்கிறோம். மற்ற இருவரைவிட இவள் நல்லஅழகு. எல்லாவற்றிலும் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குவாள். எதையும் எளிதில் கற்றுக்கொண்டுவிடுவாள். இசை, நாட்டியம், டென்னிஸ், ஃப்ரெஞ்ச் என்று எங்கள் வசதிக்குமீறி செலவுசெய்து அவளுக்குக் கற்றுக்கொடுத்தோம். மேலேபடிக்க அமெரிக்கா வந்தாள். படித்து முடிக்கும்போதே நிறைய வரன்கள் தேடிவந்தன. "மேலே Ph.D. படிக்கப் போகிறேன். கல்யாணம் வேண்டாம்" என்றாள். எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. ஆகவே இரண்டாவது பெண்ணுக்குத் திருமணத்தை முடித்தோம்.

Ph.D. பாதி படித்துக்கொண்டிருக்கும்போது, ப்ரொஃபசரைப் பிடிக்கவில்லை, படிப்பை நிறுத்திவிட்டேன். வேலை பார்த்துக்கொண்டு விட்டேன்" என்று திடீரென்று சொன்னாள். சொல்லி இரண்டுமாதத்தில் 'சர்ப்ரைஸ்' என்று சொல்லி, இந்தியாவிற்கு வந்து குதித்தாள். தனியாக இல்லை. தான் காதலித்து, தானே நிச்சயம் செய்துகொண்ட ஒரு பையனுடன். அமெரிக்காக்காரர்கள் 'surprise' என்று சொல்வது, எங்களுக்கெல்லாம் 'shock' ஆகத்தான் இருக்கிறது. பெரிய இடி. அவன் அமெரிக்கன். அம்மா இந்தியன், அப்பா அமெரிக்கன். பார்க்க நன்றாக இருந்தான். இவளைப்போல படித்தும் இருந்தான். ஆனால், எங்களைப்போல மத்தியதரக் குடும்பங்களுக்கு குலம், கோத்திரம் முக்கியமாகத்தான் பட்டது. எங்கள் எதிர்ப்பு அவளை ஒன்றும் செய்யவில்லை. இதுபோலத் திருமணம் செய்து கொண்டிருந்த உறவினர் குடும்பங்களிடம் போய் நியாயம்கேட்டு, எப்படியோ ஒத்துக்கொண்டோம்.

இந்தியாவில் நம் முறைப்படி திருமண ஏற்பாடுகளை உடனடியாகச் செய்ய ஆரம்பித்தோம். அந்தப் பையனுக்கு நம் வழக்கம் தெரியவேண்டும் என்று, என் மற்றப் பெண்ணின் திருமண டிவிடி போட்டுக் காண்பித்தேன். அவன் தன்னையறியாமலேயே ஒரு விசித்திர 'கமெண்ட்' அடித்தான். அதை நான் இங்கே சொல்ல விரும்பவில்லை. என் மனது கொஞ்சம் நொறுங்கிப் போய்விட்டது. 'நான் ஏன் கட்டாயப்படுத்தி அவர்களை இந்துமுறைப்படி திருமணம் செய்யவைக்கிறேன்" என்று யோசித்து, எல்லா ஏற்பாடுகளையும் நிறுத்தினேன். அவன் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. அமெரிக்கா திரும்பப்போய் ஏதோ 'Destination Wedding' செய்துகொண்டார்கள். நாங்கள் விருந்தினர்போலப் போய்த் தலையைக் காட்டிவிட்டு, ஒரு உற்சாகமும் இல்லாமல் திரும்பிவந்தோம். ஆரம்பகாலத்தில் இருந்து அவனைப்பற்றி ஏதோ உறுத்திக் கொண்டே இருந்தது. அவனது பெற்றோர் டிவோர்ஸ் செய்து விட்டார்கள். அவன் தனியாளாகவே இருந்துவந்திருக்கிறான். நன்றாகப் படித்திருக்கிறான் என்றாலும், இரண்டு வருடங்களில் ஏழுமுறை வேலைமாற்றம் செய்திருக்கிறான். அவன் இந்தியா வந்திருந்தபோது சின்னச்சின்ன முரண்பாடுகளை அவனிடம் கவனித்தேன். அதை என் பெண்ணிடம் எடுத்துச் சொன்னபோது, 'அம்மா... உனக்கு இந்தக் கல்யாணத்தில் இஷ்டமில்லை. ஏதாவது சொல்லி என் மனதை மாற்றப்பார்க்கிறாய். அவன் எத்தனை தடவை வேலைமாற்றினால் என்ன, அவ்வளவு ஸ்மார்ட். உடனுக்குடன் வேலைக்கு எடுத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். I am proud of him" என்று எனக்கு பதிலடி கொடுத்தாள்.

இதெல்லாம் முடிந்து ஐந்து வருடம் ஆகிவிட்டது. அவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பையன். மூன்று மாதங்களுக்கு முன்பு, உடனே என்னை வரச்சொல்லிக் கூப்பிட்டாள். என்ன செய்தி என்று சொல்லவில்லை. இங்கு வந்தபோது தெரிந்தது. அவர்கள் பிரிந்துவிட்டார்கள். காரணம், அவன் பொறுப்பான தந்தையாக இல்லையாம். அடிக்கடி ட்ராவெல் செய்கிறானாம். வீட்டில் இருந்தாலும் உதவுவது இல்லையாம். Nanny போட்டிருந்தார்களாம். அவளுக்கு உடம்பு சரியில்லாமல் இரண்டுவாரம் லீவில் போயிருந்தபோது இவர்களுக்குள் அடிதடி சண்டை. "எனக்கு அவன் வேண்டாம். என்னால் தனியாக என் பையனை வளர்த்துக்கொள்ள முடியும். நான் டிவோர்ஸ் ஃபைல் பண்ணிவிட்டேன்" என்று சொன்னாள். "குழந்தையைப் பெற்றுக்கொண்டு, ஒரு தகப்பன் இல்லாமல் வளர்க்கமுடியுமா? கொஞ்சம் யோசித்து முடிவுசெய். இந்த diaper விவகாரம் divorceல்தான் முடியவேண்டுமா?" என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். கேட்கவில்லை.

நான் அமெரிக்கா வந்து நான்குமாதம் ஆகிறது. என் கணவர், 'நீ ஏதாவது செய்துகொள்" என்பதுபோல இந்தியா கிளம்பிப் போய்விட்டார். நான் இந்தக் குழந்தையோடு 24 மணிநேரமும் வெளியுலகம் தெரியாமல் இருந்து கொண்டிருக்கிறேன். என் பெண்ணுக்கு வேலையிலும் ஸ்ட்ரெஸ் அதிகம். சில சமயம் திரும்பிவர இரவு 9-10 மணி ஆகிவிடுகிறது. என்னை திரும்பிப்போகாதே என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள். எனக்கு இங்கே இருப்பது நரகமாக இருக்கிறது. குழந்தையைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. இந்தியாவில் வயதான என் கணவரை விட்டுவிட்டு இங்கே இருக்கப் பிடிக்கவில்லை. இவளிடம் சொல்லிப் பார்த்தால், ஒருநாள் தைரியமாக இருக்கிறாள். மறுநாள் 'போகாதே" என்று கெஞ்சுகிறாள். அடிக்கடி தலையைப் பிடித்துக்கொண்டு கத்துகிறாள்! நான் ஒரு Selfish Mother, எனக்கு என் சுகம், மற்ற பையன், பெண்ணைப் பற்றித்தான் அக்கறை என்று குறை சொல்லுகிறாள். சொன்னாலும் கேட்பதில்லை. தன்னாலும் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியவில்லை. மூளை குழம்பிப்போகிறது. நான் எப்படி இவளைச் சமாளித்து எனக்கு மன நிம்மதியைத் தேடிக்கொள்வது?

இப்படிக்கு
...................


அன்புள்ள சிநேகிதியே:

நான் சொல்வது எல்லோருக்கும் பொதுவாக ஏற்படும் அனுபவம். வாழ்க்கையில் வெற்றியில் மிதக்கும்போது, பூமியில் கால்பதிகிறதா என்று பார்ப்பதில்லை. முதலில் ஒரு காலை ஊன்றிக்கொண்டு பறக்கப்பார்ப்போம். தோல்வியையே சந்திக்காத காலகட்டத்தில், இரண்டு கால்களையும் நழுவவிடுகிறோம். சின்னத் தோல்வியோ, பிரச்சனையோ வந்து கீழே விழும்போது காயம் ஆழமாகப் பட்டுவிடுகிறது. உங்கள் பெண் சிறுவயதிலிருந்தே தன்னிச்சையாக நடந்துகொள்ளும் சுபாவமா அல்லது அவளது அழகும் திறமையும் பெற்றுக்கொடுத்த பெருமையால் நீங்கள் அவள் வழி விட்டுக்கொடுத்துவிட்டு உங்களுக்கு ஏற்படும் சங்கடத்தால் இப்போது அதிகமாக உணருகிறீர்களா என்று நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை. ஒன்றுமட்டும் புரிகிறது. உங்கள் பெண் அவள் வழியிலேயே சென்றுதான் பழக்கப்பட்டவள். கீழே விழுந்தாலும் எழுந்திருக்க சீக்கிரம் கற்றுக்கொள்வாள். உங்கள் மனநிம்மதிக்கு அவள் பொறுப்பல்ல. அதேபோல் அவளுடைய முடிவுகளுக்கும் நீங்கள் பொறுப்பல்ல. படித்து, பதவியில் இருந்து, முதிர்ச்சிபெற்ற அமெரிக்கக் கலாசாரத்தில் பலவருடம் ஊறியவர்களுக்குத் தன்னம்பிக்கையும் தற்காப்பும் கைவந்த கலை. உங்கள் பேரக்குழந்தையின் பாதுகாப்புக்கும் பிரச்சனை இருக்காது. பாசத்தின் காரணமாக நீங்கள் அடிக்கடி வந்து பார்த்துக்கொள்ளலாம். உங்களுக்கு எது முக்கியமான பொறுப்பென்று நினைக்கிறீர்களோ, அதை மனசாட்சி உறுத்தாமல் செய்யுங்கள். 'Selfish Mother' என்று சொன்னாளே என்று வருத்தப்படாதீர்கள். ஆமாம், நீங்கள் 'Selfish Mother' தான்.

உங்கள் பெண்ணின் சந்தோஷத்தையும் எதிர்காலத்தையும் பற்றித்தானே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? அவளே விவாகரத்துக்கு விண்ணப்பித்தாலும், அவளுக்கும் depression, feelings of insecurity இருப்பது இயற்கைதான். She will get over it. அவளிடம் 'அன்றைக்கே இதை எதிர்பார்த்தேன்" என்று சொல்லி நீங்களும் சோகத்தில் மூழ்கி, அவளையும் கொந்தளிக்க விடுவதைத் தவிருங்கள். அவளை அவள்வழியில் விடுங்கள். உங்கள் முடிவைச் சொல்லுங்கள். Be gentle but firm.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்

© TamilOnline.com