FeTNA தமிழ் விழா
2015 ஜூலை 2 முதல் 5ம் நாள்வரை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) தமிழ் விழா கலிஃபோர்னியா மாநிலத்தின் சான் ஹோசே நகரத்தில் "தமிழால் இணைவோம், அறிவால் உயர்வோம்?" என்னும் கருப்பொருளில் கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டு இசைப்பேரறிஞர் வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் (இவரைப்பற்றிய தென்றல் கட்டுரை) நூற்றாண்டு விழாவும், பாபநாசம் சிவன் அவர்களின் 125வது ஆண்டு விழாவும் கொண்டாடப்படவுள்ளன.

தமிழர்களின் கலை, இலக்கியம், வாழ்வியல் அறிஞர்களும், கலைஞர்களும், சமூக ஆர்வலர்களூம், தொழிலதிபர்களும் விழாவில் பங்கேற்றுச் சிறப்பிப்பர். 2014ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பூமணி அவர்கள் சிறப்பிக்கப்படவிருக்கிறார். கவிமாமணி அப்துல்காதர், கவிஞர் சுமதிஶ்ரீ, தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப் போராடும் 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பின் சுந்தரராஜன் ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளனர். சிறார் மற்றும் இளைஞர்களின் தமிழார்வத்தைத் தூண்டும் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடைபெறவுள்ளன. இளைய தலைமுறையினரை இல்வாழ்க்கையில் இணைக்க சன் தொலைக்காட்சி புகழ் 'கல்யாணமாலை' நிகழ்ச்சியும் உண்டு.

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் புகழ் ஹரிசரண், பூஜா ஆகியோருடன் முன்னணிப் பாடகர் ஆலப் ராஜு இணைந்து வழங்கும் மாபெரும் இன்னிசை இரவு உங்களை நிச்சயம் மகிழ்விக்கும். தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் தனுஷ், அவருடைய மனைவி ஐஸ்வர்யா இணைந்து வழங்கும் இனியமாலைப் பொழுதைச் சுவைக்கலாம். தமிழிசை, சங்க இலக்கிய வினாடிவினா, கருத்தரங்கம், கவியரங்கம், கல்கியின் 'சிவகாமியின் சபதம்' பிரம்மாண்ட வரலாற்று நாடகம் என்று வண்ணவண்ண நிகழ்ச்சிகளின் அணிவகுப்பு உண்டு.

அமெரிக்க மண்ணில் சாதனை புரிந்த தமிழர்களைக் கொண்டாடும் "அமெரிக்கத் தமிழ் முன்னோடிகள் (Tamil American Pioneer) விருது வழங்கும் நிகழ்ச்சி இளையதலைமுறைக்கு பெரும் ஊக்கத்தைத் தருவதாக அமைந்திருக்கும். அனைவரும் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றுக் களிக்க வேண்டுகிறோம்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com