Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | சிரிக்க சிரிக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
தீபா
சுதந்திர தாகம்
மாடு இளைத்தாலும்... : 3ம் பரிசுக் கதை
- ஷைலஜா|ஜனவரி 2012||(9 Comments)
Share:
முப்பாட்டன் காலத்தில் புதுப்பிச்சிக் கட்டின வீடாம் - சொல்வார்கள். கொஞ்சம் காலை வீசி நடந்தால் முழு வீட்டையும் பார்த்து முடிக்க அரைமணி ஆகும். நிதானமாக நடந்தால் கேட்க வேண்டியதில்லை. ஒருமணி நேரம்கூடஆகலாம், அம்மாம் பெருசு! நெல் உலர்த்த, சோளம், கம்பு உலர்த்த என்று நாலு முற்றம். கால்பந்து விளையாடற கிரவுண்ட் மாதிரி, காக்கை குருவி எல்லாம் கொத்தணும்னு தெறந்த வெளி முற்றம்! முப்பாட்டனுக்கு கட்டிடக் கலையிலே ஆர்வம் அதிகமா இருந்திருக்கணும். அவருக்கு எல்லாமே பெருசா இருக்கணும் (மூணு பொண்சாதிகளாம் அவருக்கு). ஒரு விசேசம் வீட்டுல சாப்பாடுன்னா, எட்டு ஊரு கூடிரும். அத்தோடவா. சாப்பிட்ட அம்புட்டு பேருக்கும் கையிலே ஒரு அணா தட்சணை வேற! அந்த காலத்து ஓரணா. இன்னித்து மதிப்புக்கு அது எத்தினி ரூவான்னு நீங்களே கணக்கு போட்டுக்குங்க.

ஆனா அதெல்லாம் அந்தக் காலத்தோட போச்சு. இப்போ இந்தக்கட்டிடத்தை மராமத்துப் பாக்கவே வக்கில்லை அதான் நெலமை.

பெருமூச்சுவிட்டபடி "அப்பனே...தண்டபாணி" எனக் கூவினார் நாச்சிமுத்துக் கவுண்டர். பட்டாசாலைக்கு வந்து நின்றார்.

வலது பக்கம் பிரும்மாண்டமாய், மூன்றடுக்காய் நீண்டிருக்கும் வீச்சுக்கு மன்றம்னு பேரு. அங்கேதான் கவுண்டரின் மூதாதையர்கள்--பரம்பரைப்பட்டையக்காரர்கள்--சிம்மாசன நாற்காலியில் உட்கார்ந்து நீதிபரிபாலனம் செய்வாங்களாம்! ம்ம்ம்....அது ஒரு காலம்!

"அப்பனே தண்டபாணி!" சுவரில் குலதெய்வம் தண்டபாணி. சித்திரத்தைப்பார்த்தால் நம்மைப்பார்த்து சிரிப்பதைப்போல, நம்மோடு பேசுவது போல அப்படி ஒரு தத்ரூபம். பல இடங்களில் வண்ணங்கள் பெயர்ந்துபோன அந்தக் காலத்துச் சித்திரம்.

கவுண்டர் ஓய்வு எடுத்துக் கொள்வதற்காக இந்த மன்றத்தில் உள்ள சாய்வு நாற்காலிக்குத்தான் வருவது வழக்கம். அந்த நாற்காலிக்கு வெள்ளியில் கால்கள். சாய்மானங்களில் வெள்ளிப்பூண்கள். இப்போ நசுங்கி, தேய்ந்து, பல்லை இளிக்கிற வெள்ளி.

நாற்காலியில் சாய்ந்தவர் சற்றுத்தான் கண் அயர்ந்திருப்பார். ஏதோ அரவம் கேட்கவே விழிப்புக் கொடுத்துவிட்டது.

அம்மணி வந்து நின்றாள். நின்ற தோரணை, நின்ற இடம் இரண்டையும் பார்த்தபோது ஏதோ பிராது கொடுக்க வந்த மாதிரி இருந்தது. அங்ஙன நின்றுதான் பட்டையக்காரர் கிட்ட அந்தக்காலத்திலே பிராது, விண்ணப்பம் எல்லாம் கொடுப்பாங்களாம்.

"என்னா?" கவுண்டரின் குரல் சொடுக்கிற்று சாட்டை போல. உதடுகள் அசைந்தபோது மேல் உதடுகளில் ஆரோகணித்திருந்த கொடுவாள்மீசை பக்கவாத்தியம் போல உடன் அசைந்தது.

"நம்ம மாரிமுத்து விஷயமாத்தான்.." அம்மணியின் குரல் மெல்ல தொண்டைக் குழிக்கு உள்ளிருந்து வெளிவர முயற்சித்தது.

"ஏன் அவனுக்கு என்னா?"

"தெரியாத மாதிரி என்னயக் கேட்டா....?" இப்போது அம்மணியின் குரல் தீர்க்கமாகவே வந்து வெளியே விழுந்தது.

இச்சமயம் சொல்லிவைத்தாற்போல மாரிமுத்து அங்கே வந்து கவுண்டச்சியின் பக்கம் நின்று கொண்டு அப்பனைப் பார்த்தான்.

அம்மாளும் பையனும் நிக்கிற விதத்திலேயே கவுண்டருக்கு புரிந்து போயிற்று. ஒத்திகை பாத்துட்டுத்தான் ஆயியும் மகனும் வந்திருக்காங்கன்னு.

"மாரிமுத்து பி.ஏ. பாஸ்பண்ணி வருசம் மூணாயிட்டுது. ஊரு முச்சூடும் கம்பூட்டர் படிச்சவங்களுக்குத்தான் ஜோலின்னு போயிட்டாங்க நம்ம பையன்தான் பாவம் சொம்மாவே கெடக்குறாரு."

கவுண்டர் தலையை அசைத்து ஆமோதித்தார், அனுசரணையுடன்.

"இன்னமும் ஒருவேலையும் கெடச்சபாடில்ல. நீங்க ஒருவார்த்த சொல்லிப் போடப்புடாதா?"

"யார்ரா இவ? நான் சொன்னா எவண்டி வேலை கொடுக்கக் காத்திருக்கான்?"

"நீங்களே நேராச் சொல்லணுமா? உள்ளூருலயே பேங்கிலே வேலைக்கு ஆளு எடுக்கிறாங்களாம். அந்த பாங்குக்கு நம்ம சோலமுத்துதான் சேர்மேன். நீங்க அதுகிட்ட ஒரு வார்த்த சொன்னா போதும்."

அட...வெவரமாத்தான் ஒத்திக பாத்திருக்காங்க. எதனை எதனாலே எப்படி முடிக்கலாம்னு திருவள்ளுவர் சொல்லி இருக்காரில்ல, அந்தக் கதையா....

சோலமுத்து அவரால் ஆளானவன்தான். அனாதையாக் கிடந்தவனை அவர்தான் படிக்க வச்சி, துணிமணி வாங்கிக் கொடுத்து, செலவுக்கு காசு கொடுத்து சொந்தக் காலை ஊனி முன்னேறப் பண உதவி எல்லாம் செய்து உதவினார். இப்போ நல்ல நெலமைக்கு வந்துட்டான்.
அந்த பாங்கும் பேர் சொல்லும்படியா பத்து வருஷத்திலே நூறு கிளை விட்டு பெரிய ஆலமரமா வளர்ந்திருச்சி. சோலைதான் அந்த பாங்க் வளர்ச்சிக்கும் காரணம் என்பது அவருக்குத் தெரியும்.

"என்ன யோசிக்கிறீங்க?" அம்மணி உசுப்பினாள்.

"அப்பா, நீங்க ஒருவார்த்தை சொன்னா போதும்ப்பா. எனக்கும் வயசு ஏறிக்கிட்டே போவுதுப்பா" என்றான்.மாரிமுத்து. அருமை மகன்! மூணு பெண்குழந்தைகளுக்குப் பின்னே காரமடை ரங்கநாதருக்கு வேண்டிக்கொண்டு பின்பு பிறந்தவன். தாத்தா பெயரை வைத்துக் கொண்டிருந்தாலும் அரங்கராசன் என்ற இன்னொரு பெயரும் அவனுக்கு உண்டு. பெண்களைக் கரையேற்றியதில் மகனுக்கு இந்தப் பழையநாள் வீட்டைத் தவிர கொடுப்பதற்கு வேறு எந்தச் சொத்தும் இல்லாத தன்மீது கவுண்டருக்குச் சற்றே ஆயாசமாய் வந்தது.

கவுண்டர் இருவரையும் பார்த்தார். அவர்கள் சொல்வது நியாயம். சோலமுத்துவால் இது ஆகக் கூடியதுதான். ஆனா இதுவரை அவருடைய ஆயுசில், யாரிடமும் ஒரு சிபாரிசுக்குப் போய் நின்றதில்லையே! அவரை நாடித்தான் எல்லோரும் சிபாரிசுக்கு வருவார்கள். இப்போ ஓடம் வண்டியிலே ஏறுது.

"யோசிக்காதீங்கப்பா.."

"சரிப்பா.." கவுண்டர் பெருமூச்சு விட்டார். "நாளைக்கே சோலமுத்துவப் பாத்துடுவோம்" என்றார்.

ஆயிக்கும் மகனுக்கும் வேலையே கிடைத்துவிட்ட சந்தோஷம். அங்கிருந்து அகன்றார்கள்.

*****


சோலைமுத்துவைப் பார்க்க கவுண்டர் சென்றபொழுது சோலைமுத்துவே மனைவி பர்வதம் சகிதம் தனது பங்களாவின் முன்பரப்பில் தெரிந்த புல்வெளியில் நின்று கொண்டிருந்தான்.

அவரைக் கண்டதும் அவனுக்கு வியப்புத் தாளவில்லை.

"ஐயா! வாங்கய்யா! ஒரு வார்த்தை சொல்லி அனுப்பி இருந்தீங்கன்னா நானே வந்திருப்பேனே என் கண்களையே என்னால நம்ப முடியல்லியே.. நீங்கதானா வந்திருக்கிறது? பர்வதம் வா. அய்யா கால்ல உளுந்து கும்புட்டு ஆசிர்வாதம் வாங்கிக்கலாம்."

வாசல் என்றும் பாராமல் கணவனும் மனைவியும் கவுண்டரின் காலில் விழுந்துவிட்டார்கள். அதிலும், பர்வதம் பெயருக்கு ஏற்ப பெருத்த சரீரத்துடன் தரையில் உருள்கிறமாதிரியே சாய்ந்துவிட்டாள்.

கவுண்டருக்கு கணம் உடம்பு ஆடிவிட்டது. எத்தனை மரியாதை, எத்தனை பக்தி இவனுக்கு!

"வாங்கய்யா! என்ன இருந்தாலும் நம்ம வீட்டு பட்டாசாலைக்கும் மன்றத்துக்கும், இந்த வீடெல்லாம் ஈடாகாது" என்றான் சோலைமுத்து பவ்யமாக.

அவர் கையெடுத்து அவனை அமர்த்தியவாறு ஹாலை ஒரு நோட்டம் விட்டார், பின் அமர்ந்தார். சோலைமுத்து நின்று கொண்டுதான் இருந்தான். அவருக்கு எதிராக எந்தக் காலத்தில் அவன் உட்கார்ந்திருக்கிறான்?

மாரிமுத்து நிற்பதை கவனித்த சோலைமுத்து, "அடேடே! சின்னப்பட்டயக்காரர் நிக்கலாங்களா? உக்காருங்க தம்பி!" என்று உபசரித்தான்.

பர்வதம் தட்டு நிறைய இனிப்பு, கார வகைகளையும் பழங்களையும் கொண்டுவந்து பரப்பினாள்.

சோலைமுத்து நின்ற தோரணை, அவனைப்பார்த்தால், ஏதோ விண்ணப்பம் கொடுக்க வந்தவனைப்போல கவுண்டருக்குத்தோன்றிற்று.

பரம்பரைப் பட்டயக்காரர் ரத்தமாச்சே, விண்ணப்பம் வாங்கின வம்சமாச்சே தவிர யாரிடமும் விண்ணப்பம் கொடுத்த வர்க்கம் அல்லவே!

"ஐயா!"

"என்ன சோலமுத்து?"

சோலைமுத்து தலையைச் சொறிந்தான் "நீங்க ஒரு வார்த்தை சொல்லிப்போடணும், அப்புறமா எல்லாம் நடந்துரும்யா."

"என்னப்பா சொல்ற சோலே?"

"வர்ற எம்.எல்.ஏ. எலெக்சன்ல போட்டி போடலாம்னு இருக்கேன், ஆதரவும் நெறய இருக்குது.... நம்ம பூங்காவனம் செட்டியார்தான் தேர்வுக் கமிட்டில முக்கியமானவரா இருக்காரு..."

"அட நம்ம ஊத்துக்குளி பூங்காவனமா?"

"ஆமாய்யா. உங்க சிஷ்யப் பிள்ளேன்னு தன்னை அவரே அடிக்கடி சொல்லிக்குவாரே, அவரேதான்"

இதைக் கேட்டதும் கவுண்டருக்குச் சிரிக்க வேண்டும் போல் இருந்தது.

ஆனால் மாரிமுத்துவுக்கோ தன் கனவுகள் எல்லாம் பொசுங்கிப் போனாற்போல் பெருத்த ஏமாற்றமே ஏற்பட்டுவிட்டது. "இதென்னடா வம்பாப் போச்சு? நாம சிபாரிசுக்கு இவருகிட்ட வந்தா இவரு நம்ம அப்பாகிட்ட சிபாரிசுக்குக் கையை ஏந்தறாரே? நல்ல நாளிலேயே நாளிப்பாலு, இப்போ கேக்கணுமா? அட அப்படியே நம்ம சிபாரிசை எடுத்து வச்சாலும் ஒரு சிபாரிசுக்கு இன்னொரு சிபாரிசை வெலை பேசற மாதிரி அல்லவா ஆயிப்போயிரும்?" மனசுக்குள் முணுமுணுத்தபடி கைகளைப் பிசைந்தான்.

கவுண்டர் எழுந்து நின்று சோலமுத்துவின் தோள்களைத் தட்டிக்கொடுத்தார். "கவலைப்படாதே. உன்னை சிபாரிசு செய்யறது எனக்குப் பெருமைதான். பூங்காவனத்துக்கும் தராதரம் எல்லாம் தெரியும் உண்மையாவும் கட்சிக்கு விஸ்வாசமாயும் மக்களுக்கு உழைக்க உன்னைவிட்டா வேற யாரப்பா இருக்காங்க? பாக்கப்போனா இது சிபாரிசே இல்லப்பா. சரி நான் கெளம்புறேன்" என்றார் கவுண்டர் இருக்கையை விட்டு எழுந்தபடியே.

சோலைமுத்துவும் பர்வதமும் வாசலில் சேவித்தது போதாது என்று ஹாலிலும் ஒருமுறை வணங்கி எழுந்தார்கள்.

*****


ஆனால் இவ்வளவு ஆனபிறகு எதிர்பாராதது நடந்தது.

ஆமாம்! மாரிமுத்துக்கு வங்கியிலிருந்து வேலைக்கு உத்தரவு வந்தேவிட்டது.

"அப்பனே தண்டபாணி!" கவுண்டர் பெருமூச்சுவிட்டார். "கடைசிவரைலே நான் யார்கிட்டவும் சிபாரிசுக்கு போகக் கூடாதுங்கறது அப்பன் தண்டபாணியின் சித்தம் போலிருக்கு! எப்படியோ வேலை கெடச்சிடிச்சி இல்ல! நல்லபடியா ஒளுங்கா வேலையக் கத்துக்கிட்டு நல்லபேர் வாங்கோணும்" என்றார் மகனிடம்.

*****


"நல்லவேள பருவதம்.. கவுண்டரய்யாக்குத் தெரியாமலேயே நான் என் நன்றிக்கடனை அடைச்சிட்டேன்.. அவரு அன்னிக்கு வூடு வர்ரப்போ வாசல்ல மகன் மாரிமுத்துகூட பேசிட்டு வந்ததை நான் கேட்டுக்கிட்டது அவருக்குத் தெரிய வாய்ப்பு இல்ல. அதனாலதான் அவரு அன்னிக்கு வாயத் தொறக்கிறதுக்கு முன்னாடி நான் சிபாரிசுக்கு என் வாயைத் தொறந்து கேட்டுகிட்டேன்" என்றான் நெகிழ்ந்த குரலில் சோலமுத்து.

"இல்லீங்களா பின்ன, மாடு எளைச்சாலும் கொம்பு தேயுலாமுங்களா? நாமதான் தேய விட்டுருவோமாங்க? நீங்க செஞ்சிப்போட்டது சர்தாங்க மாமா" என்றாள் பர்வதம்.

ஷைலஜா,
பெங்களூரு, இந்தியா
More

தீபா
சுதந்திர தாகம்
Share: 




© Copyright 2020 Tamilonline