Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | அஞ்சலி
Tamil Unicode / English Search
நலம்வாழ
"எனக்கு ஒத்துக்காது இந்த உணவு..."
- மரு. வரலட்சுமி நிரஞ்சன்|பிப்ரவரி 2009|
Share:
Click Here Enlargeஉணவு ஒவ்வாமை அமெரிக்க வாழ்க்கையில் மிகவும் பழகிப் போன நோய். அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் வாழும் இந்தியக் குழந்தைகளிடம் உணவுப்பொருள் ஒவ்வாமை அதிகம் காணப்படுகிறது. பிறப்பில் இருந்தே இந்த ஒவ்வாமை கண்டு பிடிக்கப்படலாம். ஒரு சிலருக்கு முதல் இரண்டு வயதுக்குள் பலவித அறிகுறிகள் மூலம் இவை தெரியவரலாம். இதைப்பற்றி விரிவாக இங்கே காணலாம்.

ஒவ்வாமை ஏற்படுவது ஏன்?
ஒருசில உணவுப் பொருட்களில் உள்ள புரதத்தை உடல் வேண்டாம் என்று ஒதுக்குவதே ஒவ்வாமை. தற்காற்ப்புக்கு என ஏற்படுத்தப்பட்ட அணுக்கள் அளவுக்கு மீறி உற்பத்தியாகி, உடலையே சேதம் செய்ய வல்லனவாக மாறி விடுகின்றன. ஒரு சிலருக்கு முதல்முறை உண்ணும் போது ஒவ்வாமை ஏற்படாது. இரண்டு அல்லது மூன்றுமுறை உட்கொண்ட பின்னரே ஏற்படும். இந்த ஒவ்வாமை புரதத்தை உடல் நன்கு அறிந்த பின்னரே அதன் தாக்கம் அதிகமாகும். ஒருமுறை ஒவ்வாமை ஏற்பட்ட பின்னர், அதை அறவே நீக்குவது கடினம். உடலில் ஒவ்வாமை ஏற்படுத்த வல்ல அணுக்கள் ஒவ்வாமை செய்யும் புரதத்தை (Allergen) அறிந்து கொண்டு அதை மிகவும் துல்லியமாக நினைவில் வைத்திருக்கின்றன. இதனால், எத்தனை நாட்களுக்குப் பின்னால் அந்த புரதத்தை உட்கொண்டாலும் அவை ஒவ்வாமை அறிகுறிகளை செய்ய வல்லனவாகும்.

பருப்பு வகை ஒவ்வாமை
வேர்க்கடலை, முந்திரிப் பருப்பு, பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் ஒவ்வாமை ஏற்படுத்துவது ஆசியக் குழந்தைகளிடம் அதிகம். இது நம்மில் பலர் இந்தியாவில் கேள்விப்படாத ஒன்று. மேற்கத்திய நாடுகளில் இந்தப் பருப்புகளை, குறிப்பாக வேர்க்கடலையை வேறு விதமாகக் கையாளுகின்றனர். இந்த முறையில் புரதச் சத்து உருமாறி, அது ஒவ்வாமை ஏற்படுத்த வல்லதாகிவிடுகிறது. இதில் ஆசியக் குழந்தைகளின் மரபணுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இந்த வகை ஒவ்வாமை தீவிரம் வாய்ந்தது. முதலில் தோல் சிவக்கலாம். அரிப்பு உண்டாகலாம். உடலில் சில பாகங்கள் வீங்கலாம். குறிப்பாக, கண்கள், உதடுகள், நாக்கு, தொண்டைக்குழி ஆகியவை வீங்கலாம். தீவிரம் அதிகமானால் தொண்டைக்குழி மூடி மூச்சு விட முடியாத அபாயம் நேரிடலாம். அதிலும் இது மிக வேகமாக ஏற்படக்கூடியது என்பதால், உடனடியாகச் சிகிச்சை வழங்க முடியாது. மூச்சுக் கருவிகளை இணைக்க தொண்டையில் குழாய்களை நுழைக்க முடியாத நிலை ஏற்படலாம். ஆக இந்தத் தீவிரம் நிகழாமல் தவிர்ப்பதே உத்தமம். இந்த வகைத் தீவிர ஒவ்வாமைக்கு Anaphylaxis என்று பெயர்.

இதில் சிலருக்குச் சில பருப்புகளும், பலருக்கு எல்லாப் பருப்புகளும் ஒவ்வாமை செய்ய வல்லன. ஒருசில வேளைகளில் இந்த ஒவ்வாமை ஒரு புரதத்தின் அமைப்புப் போல மற்றொன்று அமைந்திருந்தால், அதை உடல் தவறாக நினைத்து ஒவ்வாமை ஏற்படலாம். இதைக் குறுக்கு எதிர்வினை (cross reactivity) என்று சொல்வர். பல வேளைகளில் உணவுத் தொழிற்சாலைகளில் ஒரு பருப்பும் மற்றொன்றும் ஒரே கருவியில் பொடி செய்வதின் மூலம் ஒவ்வாப் புரதம் ஒவ்வும் புரதத்தோடு கலக்கவும் வாய்ப்பு உண்டு. இது குறுக்கு மாசுபடல் (cross contamination) என்று சொல்லப்படும். ஆகவே மிகவும் கவனம் தேவை.

தானிய வகை ஒவ்வாமை
கோதுமை, அரிசி, கடலைப் பருப்பு, ஒரு சில அவரை (bean) வகைகள் ஒவ்வாமை ஏற்படுத்துவதுண்டு. இதில் கோதுமை குறிப்பிடத்தக்கது. கோதுமையிலிருந்து செய்யப்படும் ரவை மற்றும் பலவகை உணவுப் பொருட்கள் ஒவ்வாமை செய்யவல்லன. இவை வயிற்றுப்போக்கை ஏற்படுத்தலாம். சிலருக்கு வாந்தி, எடை கூடாமல் இருப்பது, அடிக்கடி ஜலதோஷம் போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம்.

குளூடன் (Gluten) எனப்படும் ஒரு புரதம் கோதுமையில் இருக்கிறது. இந்தப் புரதமும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இந்த ஒவ்வாமை இருப்பவர்கள் அடிக்கடி வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, பித்தம் என்று அவதிப்படுவர். இந்த வகை நோய் 'Celiac disease' என்று சொல்லப்படும். இது குழந்தைப் பருவத்தில் ஏற்படலாம். ஆனால் பெரும்பாலும் 20 முதல் 40 வயது ஆனவர்களிடத்தில் அதிகம் காணப்படுகிறது. இவர்கள் எடை குறைந்தே காணப்படுவர். பலருக்கு விடமின் குறைபாடு ஏற்பட்டு அதனால் சில அறிகுறிகள் தோன்றலாம். ரத்தத்தில் இரும்புச் சத்து (iron defeicency anemia) குறைந்து சோகை ஏற்படுவதும் சகஜம். இந்த வகை நோய் இருப்பது கண்டுபிடிக்கக் காலதாமதம் ஆகலாம். அறிகுறிகள் பலவிதமாக இருப்பதால், நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் இந்த நோய் ஒரு சவாலாக அமைந்து விடுகிறது. ஒரு சிலருக்கு ரத்தப் பரிசோதனையில் தெரியலாம். பலருக்கு உணவு செல்லும் வயிற்றுப் பகுதியின் தசையைப் பரிசோதிப்பதின் மூலம் கண்டு பிடிக்கலாம். ஆனால் இந்த நோய்க்குத் தீர்வு காண்பது சுலபம். குளூடன் புரதத்தை அறவே தவிர்ப்பதின் மூலம் இந்த நோய்க்கு முற்றுப்புள்ளி இட முடியும்.

பால் மற்றும் பால் பொருட்களின் ஒவ்வாமை
இந்த வகை ஒவ்வாமை சின்னக் குழந்தைகளிடத்தில் ஏற்படும் போது, வளர்ச்சி தடைப்படலாம். ஒரு சில குழந்தைகளுக்கு, பால் சரியாகச் செரிக்காமல், அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படலாம். தாய்ப்பால் அருந்தும் காலத்திலேயே இந்த ஒவ்வாமை தெரிய வரலாம். மாதக் குழந்தைகள் பொதுவாக அடிக்கடி மலம் கழிப்பதால், இந்த ஒவ்வாமையைக் கண்டுபிடிக்கக் கால தாமதம் ஆகலாம். குழந்தைகள் எடை கூடாமல் இருந்தாலோ, எடை அளவுக்கு அதிகமாகக் குறைந்தாலோ இது கண்டு பிடிக்கப்படும். அடிக்கடி பசி, அதிருப்தி, சோர்வடைதல் போன்றவையும் இந்த ஒவ்வாமையின் அறிகுறிகளாக இருக்கலாம். பால் அருந்துவதைத் தவிர்ப்பதின் மூலம் இதைக் குணப்படுத்தலாம். ஆனால் சின்னக் குழந்தைகளின் வளர்ச்சிக்குப் பால் மிகவும் தேவை. ஆகவே இதை சோயா பால், அல்லது பாதாம் பால் மூலம் பூர்த்தி செய்யலாம். இதற்காகச் சில விசேடப் பால் பொடி வகைகள் உள்ளன. இந்த வகை ஒவ்வாமை இருப்பவர்கள் பால் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். தயிர், வெண்ணெய், பாலாடைக் கட்டி (பன்னீர்) போன்றவையும் வயிற்றுப்போக்கு உண்டாக்கலாம். மருத்துவரின் ஆலோசனையுடன் ஒவ்வொன்றாக இந்த உணவுப் பொருட்களை மிகச் சிறிய அளவில் உண்பதன் மூலம் காலப்போக்கில் இந்த ஒவ்வாமையின் அளவு குறையலாம்.

Secondary Lactose intolerance
வைரஸ் அல்லது பாக்டீரியா மூலம் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து பல வாரங்களுக்குப் பால் பொருட்களுக்கு ஒவ்வாமை ஏற்படுவது உண்டு. இது தற்காலிகமானது. நமது சிறுகுடலில் இருக்கும் 'villus' என்று சொல்லப்படும் சின்ன நாளங்கள் புதிதாக உற்பத்தி ஆகும்வரை இந்த ஒவ்வாமை இருக்கலாம். பிறகு படிப்படியாக பால் பொருட்களைச் சேர்க்க முடியும். இது குழந்தைகள் மற்றும் பெரியவர்களையும் தாக்கலாம். குறிப்பாக ஒவ்வாமை மரபணுக்கள் இருப்பவரையும், மேற்கூறிய சிறுகுடல், பெருங்குடல் சேர்ந்த நோய் இருப்பவர்களையும் தாக்கலாம். இவர்கள் 'Lactaid' என்று சொல்லப்படும் 'lactose' இல்லாத பாலைச் சேர்த்துக் கொள்ளலாம்.

மீன் மற்றும் நீர்வாழ் உணவுப் பொருள் ஒவ்வாமை
இது பொதுவாக தோல் சிவப்பாகுதல், அரிப்பு என்று காணப்பாடும். இதன் தீவிரம் அதிகமானால் Anaphylaxis ஏற்படலாம். இதைத் தவிர்ப்பதே சாலச் சிறந்தது.
வளரும் குழந்தைகளிடத்தில் ஒவ்வாமையின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். விடலைப் பருவத்துத் தன்னிச்சை காலத்தில் மிகவும் அதிக கவனம் தேவை. ஒரு சிறு துளி அளவு ஒவ்வா உணவு கூட உயிரைப் போக்க வல்லது என்பதை உணர்ந்து கவனமாக இருக்க வேண்டும்.
ஒவ்வாமைக்குத் தீர்வுகள்
ஒவ்வாமை இருப்பதை முதலில் அறிய வேண்டும். அதற்குச் சில பரிசோதனைகள் மேற்கொள்ளலாம் ஒவ்வாமை நிபுணர்கள் இதைத் தோல் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை மூலம் கண்டு பிடிப்பர். தீவிரமான பருப்பு வகை ஒவ்வாமைப் பரிசோதனைகளைக் கைதேர்ந்த நிபுணர்களின் அலுவலகத்திலோ அல்லது மருத்துவமனையிலோ மேற்கொள்வது இன்றியமையாதது.

ஒவ்வாமை இருப்பதை அறிந்த பின்னர் அதன் தீவிரத்திற்கேற்ப மருந்துகள் வழங்கப்படும். ஒவ்வாப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். சில நேரங்களில் அறியாமல் உட்கொள்ள நேரிட்டுவிட்டால் கைவசம் 'EPiPen' வைத்திருக்க வேண்டும். இந்த ஊசி உயிரைக் காக்க வல்லது. மேலே கூறியபடி தீவிர ஒவ்வாமை ஏற்பட்டு உதடு அல்லது தொண்டைக்குழி வீங்குவது போல் இருந்தால் இந்த ஊசியைத் தற்காப்புக்கு உடனடியாகத் தொடையில் போட வேண்டும். இதை நோயாளியோ, பெற்றோரோ, ஆசிரியரோ வழங்கலாம். அதைத் தொடர்ந்து 911 அழைத்து மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

இந்த EpiPen ஊசிக்கும் பல பின் விளைவுகள் உண்டு. ஆகவே தேவையில்லாத போது இதை உபயோகிக்கக் கூடாது. இது இருதயத் துடிப்பை மிக வேகமாக்கும். ரத்த நாளங்களைச் சுருக்கும். ஒவ்வாமை ஏற்படும்போது ரத்த நாளங்கள் தளர்ந்து, ரத்த அழுத்தம் மிகமிகக் குறைவதால் ஏற்படும் விபரீதங்களை இந்த மருந்து தவிர்க்கும். அதே நேரத்தில் தேவையின்றி உபயோகிக்காமல் இருக்க வேண்டும்.

ஒவ்வாமை குறைக்கும் மருந்துகள்
இதைத் தவிர Zyrtec அல்லது Claritin போன்ற மருந்துகளைத் தினமும் உட்கொள்ள வேண்டி வரலாம். Singulair என்ற மருந்தும் தரப்படலாம். என்னென்ன பொருட்களுக்கு ஒவ்வாமை என்ற பட்டியலைச் சட்டைப் பையில் வைத்திருப்பது நல்லது. புதிதாக உண்ணும் உணவுகளை மிகக் குறைந்த அளவில் பதம் பார்த்து உண்பது நல்லது. இந்த மருந்துகள் அல்லது ஊசி கைவசம் இல்லாத போது புதிய உனவுகளை அறவே ஒதுக்குவது வேண்டும். மற்றவர் வீட்டில் விளையாடக் குழந்தைகளை அனுப்பும்போது அவர்களிடத்தில் ஒவ்வாமை பற்றிச் சொல்லவேண்டும். இதில் கூச்சமோ தாழ்வு மனப்பான்மையோ கூடாது.

அமெரிக்கப் பழக்கமாகிய 'sleep over'ன் போது மிகவும் கவனம் தேவை. உணவுப் பொருட்களின் அட்டையில் மிகப் பொடியான எழுத்துக்களில் ஒவ்வாமை ஏற்படுத்தக் கூடிய பொருட்களை எழுதியிருப்பர். அதை கவனத்துடன் படிக்க வேண்டும். பின்னால் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காகப் பல தயாரிப்பாளர்கள் இந்தப் பொருட்கள் கலந்திருக்கக் கூடும் என்று மேலோட்டமாய் எழுதுவதுண்டு. இதிலும் கவனம் தேவை.

குறிப்பாக, வளரும் குழந்தைகளிடத்தில் இதன் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். விடலைப் பருவத்துத் தன்னிச்சை காலத்தில் மிகவும் அதிக கவனம் தேவை. தற்போது பள்ளிகளில் ஒரு சில ஒவ்வாப் பொருட்களை அனுமதிப்பதில்லை. அதை மதிக்க வேண்டும். வேறு ஊர், நாடுகளில் பயணிக்கும் போதும் மிகவும் கவனம் தேவை. அக்கினிக் குஞ்சு காட்டை அழிக்க வல்லது என்றாற் போல ஒரு சிறு துளி அளவு ஒவ்வா உணவு உயிரைப் போக்க வல்லது என்பதை உணர்ந்து கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: www.foodallergy.org

(10 வயது நிரம்பப் போகும் எனது மகளுக்குப் பிறந்தது முதலே, வேர்கடலை, முந்திரி போன்ற பருப்புகளுக்குத் தீவிர ஒவ்வாமை உள்ளது. ஒரு மருத்துவராக மட்டும் அல்லாமல் ஒரு தாயின் பார்வையிலும் உணர்ந்ததால் இந்தக் கட்டுரை.)

மரு. வரலட்சுமி நிரஞ்சன்
Share: 




© Copyright 2020 Tamilonline