Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம் | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
தமிழக அரசியல்
வெளியே ஜெயேந்திரர், உள்ளே விஜயேந்திரர்!
குற்றவாளிக் கூண்டில் ஜெயலலிதா!
- கேடிஸ்ரீ|பிப்ரவரி 2005|
Share:
முந்தைய ஜெயலலிதாவின் தலைமையிலான (1991-96) ஆட்சிக் காலத்தில் பல்வேறு முறை கேடுகளும், ஊழல்களும் நடந்ததாக, அடுத்து வந்த தி.மு.க ஆட்சியில் ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன.

முக்கியமாக ஜெயலலிதா மீது பல்வேறு ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவ்வழக்குகள் தி.மு.க அரசால் நியமிக்கப் பட்ட பல்வேறு தனிநீதி மன்றங்களில் விசாரிக்கப்பட்டன. சில வழக்குகளில் ஜெயலலிதா குற்றமற்றவர் என்று கூறி விடுதலையும் செய்யப்பட்டார். அதிகம் பேசப்பட்ட டான்சி வழக்கில் தனிநீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து உயர்நீதி மன்றத்திலும், பின்பு உச்சநீதிமன்றத்திலும் முறையீட்டு அதில் வெற்றியும் பெற்றார்.

அவர் தனது பதவிக் காலத்தில் வருவாய்க்கு அதிகமாக, 66 கோடியே 65 லட்சம் ரூபாய் அளவிற்குச் சொத்து குவித்ததாக இவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு சென்னையில் உள்ள தனிநீதி மன்றத்தில் நடந்து வந்தது. பல்வேறு காரணங்களால் வழக்கின் விசாரணையில் தாமதம் ஏற்பட்டது.

மீண்டும் அ.தி.மு.க 2001ம் ஆண்டு பெரும்பான்மையான இடத்தைப் பெற்று ஆட்சியை கைப் பற்றியது. இம்முறை வழக்கு மிக வேகமாக நீதிமன்றத்தில் நகரத்தொடங்கியது. இதற்கிடையில், சொத்துக் குவிப்பு வழக்கைத் தற்போதைய அரசு வேகப்படுத்துவதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவும், இதன் காரணமாக இவ்வழக்கு தமிழகத்தில் நடை பெற்றால் நியாயமான விசாரணை நடைபெறாது எனவும், ஆகையால் இவ்வழக்கை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் உச்சநீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சொத்துகுவிப்பு வழக்கைக் கர்நாடக மாநிலத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.

ஏற்கெனவே தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் காவிரி குறித்த பிரச்சனை இருப்பதால் இந்த வழக்கைக் கர்நாடகத்தில் விசாரிக்க அனுமதித்தால், அந்த விசாரணை தனக்கு எதிரானதாக அமைந்துவிடும் என்றும், ஆகையால் இவ்வழக்கைக் கர்நாடகத்திற்கு மாற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஜெயலலிதா கோரியிருந்தார். ஆனால் இவரின் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டன. மறுபடியும் ஜெயலலிதா ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டு இந்த வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கர்நாடகத்தில் வழக்கை நடத்துவதற்கான தனிநீதிமன்றங்கள் தயாராக இருந்த நிலையில் 'கியூரேடிவ் பெட்டிஷன்' என்ற அடிப்படையில் ஜெயலலிதா கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு மனுவைத் தாக்கல் செய்து விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கர்நாடகத்திற்கு வழக்கை மாற்றிப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுஆய்வுக்கு எடுத்துக் கொண்டு அந்தப் தீர்ப்பை எதிர்த்து வாய்மொழியாக வாதிடுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.சி. லகோட்டி உட்பட்ட ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை ஆராய்வதற்கான அடிப்படைக் காரணங்கள் எதுவும் மனுதாரர் தரப்பில் கூறப்படவில்லை என்று கூறித் தள்ளுபடி செய்தது.

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு கூடிய விரைவில் பெங்களூரில் தொடங்கப் போகிறது.

தொகுப்பு:கேடிஸ்ரீ
More

வெளியே ஜெயேந்திரர், உள்ளே விஜயேந்திரர்!
Share: 




© Copyright 2020 Tamilonline