Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சமயம்
அஞ்சலி | சிரிக்க சிந்திக்க | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku | சதுரங்கப் புலி |
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
நம்பிக்கை நலம் தரும்
- |அக்டோபர் 2015|
Share:
ஒரு சிறிய கிராமத்தில் ஒரு தாயும் மகனும் வாழ்ந்து வந்தனர். மகனுக்கு இரண்டு வயதானபோது தந்தை இறந்துவிட்டார். மகனை வளர்த்துப் படிக்கவைக்கத் தாயார் மிகவும் சிரமப்பட்டுப் பல வேலைகளையும் செய்தார். மகன் மிகவும் கெட்டிக்காரன், பணிவானவன், தாயிடம் அன்பும் மரியாதையும் காட்டுபவன்.

அவன் வளர்ந்து ஏழாவது வகுப்பை அடைந்தான். பரிட்சைக்காகக் கடினமாகப் படித்தான். ஒருநாள் அவன் தாயிடம், "அம்மா, இன்னும் நான்கு நாட்களுக்குள் நான் இருபது ரூபாய் தேர்வுக்கட்டணம் கட்டவேண்டும்" என்றான். அம்மாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவரிடம் பணம் இல்லை. அது மாதத்தின் கடைசி வாரம் வேறு.

தாயார் குடிசையருகே இருந்த ஒரு மரத்தின் கீழே உட்கார்ந்து அழத் தொடங்கினார். மகன் பள்ளியிலிருந்து திரும்பிவந்தான். அம்மா அழுவதைப் பார்த்து "ஏன் அழுகிறீர்கள்?" என்று கேட்டான். "என்னால் நீ கேட்ட பணத்தைத் தர முடியவில்லை. நாளையிலிருந்து நீ பள்ளிக்குப் போகமுடியாது. என்னோடு வந்து வேலை செய். வேறு வழியில்லை" என்றார்.

"நீங்கள் ஏன் யாரிடமாவது இருபது ரூபாய் கடனாக வாங்கக் கூடாது? பரிட்சைக்குப் பிறகு நான் வேலை செய்து சம்பாதித்துத் திருப்பித் தந்துவிடுகிறேன்" என்றான் மகன். "மகனே, எனக்குக் கடவுள்தான் பணம் தரவேண்டும்" என்றார் அம்மா. "கடவுள் யார்? அவர் எங்கிருக்கிறார்? அவருடைய விலாசம் என்ன? நான் அங்கே போய் பணம் வாங்கிவருகிறேன்" என்றான் மகன் ஆவலோடு.

"அவர்தான் நாராயணன். வைகுண்டத்தில் இருக்கிறார். அவரே எல்லாச் சொத்துக்கும் அதிபதி."

ஒரு கணம்கூடத் தாமதிக்காமல் மகன் தபால் அலுவலகத்துக்கு ஓடினான். அவன் கையில் கொஞ்சம் சில்லறை இருந்தது. ஒரு அஞ்சலட்டை வாங்கினான். அதில் தனது நிலைமையை விவரித்து, உடனடியாக இருபது ரூபாய் அனுப்பவும் என்று கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். தபால் பெட்டி ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தது. அவனுக்கு எட்டவில்லை. இதைப் பார்த்துக் கொண்டிருந்த போஸ்ட் மாஸ்டர் வெளியே வந்து அவனிடமிருந்து அஞ்சலட்டையை வாங்கிக் கொண்டார். "யாருக்கு இந்தக் கடிதம்?" என்று கேட்டார்.
"சார், நான் வைகுண்டத்தில் இருக்கும் நாராயணருக்கு இந்த அவசரக் கடிதத்தை எழுதியிருக்கிறேன். மூன்று நாளைக்குள் நான் தேர்வுக் கட்டணம் கட்டியாக வேண்டும். அதனால் இருபது ரூபாய் உடனடியாக அனுப்பச் சொல்லிக் கேட்டிருக்கிறேன்" என்றான். "இந்த விலாசத்தை உனக்குத் தந்தது யார்?" என்று அவர் கேட்டார். அவன் தன் தாயுடன் நிகழ்த்திய உரையாடலை விவரித்தான். "கடவுள் மிகவும் கருணை வாய்ந்தவர், ஆத்மார்த்தமாகப் பிரார்த்தனை செய்தால் கடவுள் ஏழைகளின் வேண்டுகோளுக்குச் செவி சாய்ப்பார் என்று என் அம்மா கூறினார்கள்" என்றான்.

இந்த வார்த்தைகள் போஸ்ட்மாஸ்டரின் நெஞ்சை நெகிழச்செய்தன. "அன்பு மகனே, இந்தக் கடிதத்தைக் கடவுளுக்கு நான் விரைவஞ்சலில் அனுப்பிவிடுகிறேன். நீ நாளை மறுநாள் இங்கே வா" என்றார். மிகுந்த சந்தோஷத்தோடு அவன் வீட்டுக்கு ஓடிப்போனான். ஒருநாள் கழித்துப் பணம் வந்துவிடும் என்று அம்மாவிடம் கூறினான். மூன்றாம் நாள் போஸ்ட்மாஸ்டரைப் பார்க்கப் போனான்.

"வா மகனே. இந்தா, இந்தக் கவரில் இருபது ரூபாய் உள்ளது. போய்க் கட்டணத்தைச் செலுத்து" என்றார் அவர். அந்தக் கவரை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போய் அம்மாவிடம் கொடுத்தான். இது எப்படி உனக்குக் கிடைத்தது என்று அம்மா கோபமாகக் கேட்டார். போஸ்ட் மாஸ்டருடன் பேசியதை அவன் விவரித்தான். அம்மாவுக்கு நம்பிக்கை வரவில்லை. அவர் அஞ்சலகத்துப் போய் அவரைப் பார்த்து இது எப்படி நடந்திருக்க முடியும் என்று விசாரித்தார்.

"அம்மா, நான் கல்நெஞ்சக்காரனாக இருந்தேன். ஆனால் உன் மகன் கடவுளுக்கு எழுதிய கடிதம் என்னை உருக்கிவிட்டது. அவனுக்கு உதவுவதற்குக் கடவுளேதான் என்னைத் தூண்டியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் மகன் கடிதத்தை அஞ்சல்பெட்டியில் போடமுடியாமல் தவிப்பதைப் பார்த்திருக்க மாட்டேன். கடிதத்துக்கு விடையும் கிடைத்திருக்காது. அவன் தெய்வத்தின்மீது கொண்ட நம்பிக்கை உடைந்து சிதறியிருக்கும். ஒரு நல்ல பையனுக்கு உதவத் தெய்வம் தந்த வாய்ப்பாக இதை நான் எண்ணுகிறேன்" என்றார் போஸ்ட்மாஸ்டர்.

நாம் கடவுளிடம் சிரத்தையோடு பிரார்த்தனை செய்தால் அவர் உதவுவார். யாராவது ஒருவரை உதவி செய்யத் தூண்டுவார். கடவுளின்மீது அசைக்க முடியாத நம்பிக்கை எல்லாத் துன்பங்களிலிருந்து காக்கும்.
(நன்றி: 'பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் சின்ன கதைகள்' என்ற நூலில் உள்ளது. வெளியீடு: Sri Sathya Sai Books and Publications Trust, TamilNadu, Chennai.)
Share: 




© Copyright 2020 Tamilonline