Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | அஞ்சலி | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | வாசகர் கடிதம் | பொது | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
மண்ணின் மணம்
மனச்சாட்சி
ரங்கதாசி
- ஷைலஜா|ஆகஸ்டு 2012||(9 Comments)
Share:
திருவரங்கம் கோயிலை ஒட்டிய முதல்வீதியான கீழஉத்திரவீதியின் வெள்ளை கோபுர வாசலில் அந்தக் கார் வந்து நின்றது. எதிராஜ் பின் இருக்கையிலிருந்து நகர்ந்து கதவைத் திறந்து வெளியே இறங்கினார். மாலைநேரக் காற்று இதமாக வீச ஆரம்பித்தது.

"ஐயா! இந்த கிழக்கு வாசல் வழியே உள்ளேபோனால் அதிக நெரிசல் இல்லாமல் போகலாம்னு கேள்விப்பட்டிருக்கேன் அதான் இந்த வழில கொண்டுவிடறேன்" என்ற அந்த வாடகைக் காரின் டிரைவர், கேட்டதற்கு அதிகமாகவே எதிராஜ் பர்சிலிருந்து பணத்தை எடுத்துக் கையில் கொடுக்கவும், அதைக் கண்ணில் ஒற்றிக்கொண்டான்.

எதிராஜ் தலையாட்டினார். அவருக்கு இது ஒரு எதிர்பாராத பயணம். அறுபது வருஷ வாழ்க்கையில் எதுதான் அவர் எதிர்பார்த்தபடி நடந்திருக்கிறது?

எதிராஜிற்கு ஸ்ரீரங்கம் என்ற ஊருக்குள் நுழைந்ததும் நினைவுகள் பின்னோக்கிப் போகக் காரணம் இருக்கிறது.

பள்ளிநாட்களில் எதிராஜுக்கு ஓவியம் வரைவது என்றால் பைத்தியம். கண் காண்பதை விரல் அப்படியே சித்திரமாய் தீட்டும் கலை அவரிடம் ஏழு வயதிலேயே ஒட்டிக்கொண்டது. யதார்த்த ஓவிய முறையில் அப்போதே நிறைய வரையத் தொடங்கினான் சிறுவன் எதிராஜ். வீட்டுக்கு யாராவது வந்தால் அவர்களைப் பத்து நிமிஷத்துக்குள் படமாய் வரைந்துவிடுவான். பள்ளிக்கூடத்தில் டீச்சர் வீணா படேல் சொல்லுவாள், "எதிராஜ் நீ பள்ளிப்படிப்பு முடிஞ்சதும் ஓவியக்கல்லூரில சேர்ந்து படிக்கணும். உனக்கு இந்தக்கலை கைவசமாய் இருக்கிறது!"

ஆனால் அவனுடைய அப்பா இதை ஆரம்பத்தில் எதிர்த்தார்..

"நாமெல்லாம் மிடில் கிளாஸ் நமக்கெல்லாம் படிப்புத்தாண்டா நல்லது. வேலை, உத்யோகம், சம்பாத்தியம்னு கொடுக்கும். இதெல்லாம் பைசா காசுக்கு பிரயோசனம் கிடையாது..." என்று முளையிலே அவர் கிள்ளி எறிய முற்பட்டாலும் வெட்ட வெட்டத் துளிர்க்கும் மரக்கிளையாய் ஓவிய ஆர்வம் எதிராஜை டில்லியில் பேங்க் பணிக்கு சென்ற அந்த இருபத்தி இரண்டுவயதில் மாலை நேரத்தில் ஓவியக் கல்லூரிக்குச் செல்ல வைத்தது. அதற்கு அவன் அம்மா சுசீலாவின் பெருமுயற்சி உதவியது. சுசீலா அந்த நாளிலேயே தமிழ் இலக்கியம் படித்தவள்.பாரதியையும் கம்பனையும் கரைத்துக் குடித்தவள். கலைகளில் மிகுந்த ஈடுபாடுகொண்டவள்.

"அவன்தான் வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டானே, இன்னமும் அவனை சின்னப்பையன் மாதிரி விரட்டறீங்க, உங்க சொல்லுக்கே கட்டுப்படணும்கிறீங்க... ஒவ்வொருத்தன் மாதிரி சிகரெட் சினிமான்னு அலையறானா எதிராஜ்? அவன் ஆசைக்கு இனியும் தடை சொல்லாதீங்க" என்று சற்று இயல்பை மீறியே கணவரிடம் கூச்சலிட்டாள்.

ஓவியக் கல்லூரியில் சேர்ந்தான் எதிராஜ். சேர்ந்த பிறகுதான் அனாடமி பற்றி முழுமையாக அறியமுடிந்தது. கண்களையே அளவுகோலாக வைத்துக்கொண்டு மனித உடலை வரையக் கற்றுக்கொண்டான். அனாயாசமாக போர்ட்ரைட்டுகளை வரைந்து தள்ளினான்.

பிறந்து வளர்ந்தது எல்லாம் வடக்கே டில்லியில்தான் என்றாலும் எதிராஜின் அப்பாவுக்குப் பூர்வீகம் சேலம் அருகே ஒரு கிராமம். அம்மா சுசீலாவுக்கும் கிருஷ்ணகிரி என்பதால் இரண்டு தாத்தா, பாட்டிகளும் உயிரோடு இருந்தவரை அடிக்கடி தென்னக விஜயம் செய்வான் எதிராஜ். வீட்டில் தமிழ் பேசியதாலும் தமிழ்ப் புத்தகங்கள் நிறைய வைத்திருந்ததாலும் எதிராஜுக்கு தமிழில் ஈடுபாடு இருந்தது. அம்மாவிடம் நிறைய பாசுரங்களைக் கற்றுக்கொண்டிருந்தான். தென்னகத்துக் கோயில்களைப் பற்றி அவைகளின் சிற்ப ஓவியப் பெருமைகளைப்பற்றி அம்மா விவரமாய்ச் சொல்லி இருந்தாள்.

அதனால் தென்னகத்துக் கோயில்களைப் பார்த்துவர ஆவலானது. "போய்வா எதிராஜ். பேங்க்ல லீவ் கொடுக்கும்போது யோசிக்காம உடனே புறப்பட்டுடணும். எனக்குத்தான் உன்கூட வரமுடியவில்லை. அப்பாவுக்கு உடம்பு முடியலே. நான்கூட இருந்து பார்த்துக்கணும். நீ மட்டும் போய்ப் பார்த்துட்டு வா..." என்று சுசீலா மகனை அனுப்பினாள்.

மதுரையை முடித்துவிட்டு, அந்த பிரமிப்பு அகலாமல் திருச்சி வந்தவனை ஜங்ஷன் ரயில் நிலையத்தில் சித்திமகன் திவாகர் பிடித்துக்கொண்டான்.

"ஹேய் எதிராஜா நீ எங்க இந்தப் பக்கம்? தாத்தா பாட்டிகள் இறந்து போனதும் நாலு வருஷமா நீ சேலம் கிருஷ்ணகிரி பக்கம்கூட வரலையே?"

"ஆமா திவாகர்.... என்னவோ முடியாமல் போய்ட்டது. பிகாம் முடிச்சதும் டில்லிலயே வேலை கிடச்சிடுத்து. எனக்கு. இப்போ பாங்க்ல வேலை"

"ஓ வெரிகுட்! பேங்க் வேலைன்னா நிரந்தரமான சம்பளம்டா. எனக்கும் ஆசைதான் ஆனா எனக்கு அரியர்ஸ் இருக்கு உன்னை மாதிரி நான் அழகனும் இல்லை, அறிவாளியும் இல்லையே; அதோட நீ அதிர்ஷ்டக்காரனும்கூட! சரிசரி திருச்சில என்ன வேலை விஷயமா வந்திருக்கே?"

"வேலை விஷயமாக ஏதுமில்லை.... சும்மா கோயில் பார்க்கதான்..மலைக்கோட்டை போய் தாயுமானவர் தரிசனம், உச்சிப் பிள்ளையாருக்கு கும்பிடு போட்டு அப்புறம் ஸ்ரீரங்கம் போய்ட்டு மறுபடி மெட்ராஸ் வழியா கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸைப் பிடிச்சி டில்லிக்குப்போகணும்."

"அப்போ சரி. உனக்கு மலைக்கோட்டை ஸ்ரீரங்கம்லாம் நான் சுத்திக் காட்றேன். திருச்சில தங்கை வரன் விஷயமா ரயில்வேஸில் ஒர்க் பண்ற ஒருத்தரைப் பார்க்க வந்தேன் அவர் ஊர்ல இல்லையாம். அதனால உன்கூட கொஞ்சநேரத்துக்கு சுத்தறேன். எனக்கு ராத்திரிதான் கிருஷ்ணகிரிக்குப் போகணும்."

"திவா, உனக்கு எதுக்குடா சிரமம்?"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல.... சௌத் பக்கம் வந்தவன், இப்படி கிருஷ்ணகிரி வராமயே போறே நீ. அம்மாக்குத் தெரிஞ்சா கண்டிப்பா தன் அக்காவை, அதாவது உன் அம்மாவை, திட்டுவாங்க."

"இன்னொரு சமயம் கண்டிப்பா வரேன்னு சொல்லு திவா."

திருச்சியில் மலைக்கோட்டைமேல் நின்று இயற்கைக் காட்சிகளை ரசித்த எதிராஜ் கையோடு கொண்டுபோன டிராயிங் உபகரணங்களை அங்கே பரப்பிவைத்தான். மடமடவென வரைய ஆரம்பித்தான். கோயிலுக்கு வந்தவர்கள் எல்லாம் வியந்து பாராட்டிப் போனார்கள். சிலர் அவனை போட்டோ எடுத்துக்கொண்டு போனார்கள்.
"அடேயப்பா! அச்சு அசலாய் பார்த்ததை தத்ரூபமாய் வரைந்திருக்கியே எதிராஜ்! கலைகளிலே சிறந்தது ஓவியம்தான்னு சொல்வாங்க. ஓவியத் திறமை உன்கிட்ட அபாரமாய் இருக்குடா... சரி, அடுத்தது ஸ்ரீரங்கம் கோயில் போகலாம் வா," திவாகர் உற்சாகமாய் அவனை அழைத்துக்கொண்டு போனான்.

ஸ்ரீரங்கம்!

கோயிலுக்குள் நுழையும்போதே திவாகர் உரத்தகுரலில் விவரிக்க ஆரம்பித்துவிட்டான். "நான் அடிக்கடி வரும் ஊருடா. இது பூலோக வைகுண்டம்டா எதிராஜ்! இங்க எல்லாமே பெரிதுதான். பெரிய கோயில், பெரிய பெருமாள், பெரிய பிராட்டியார், பெரிய கருடன், பெரிய அவசரம் (தளிகை) அப்படீன்னு சொல்வழக்கம் உண்டு. சேஷராயர் மண்டபத்துல நீ ரசிக்க அபாரமான சிற்பங்கள் இருக்கும், பார்க்கலாம் வா."

அங்கிருந்த சிற்பங்களைப் பார்த்து அப்படியே நெக்குருகி நின்றான் எதிராஜ். சிலமணி நேரம் கல்மண்டபத்திலும் எதிரே மணல்வெளியிலும் அமர்ந்து படங்கள் வரைந்தான். அருகில் அமைதியாய் நின்று கொண்டிருந்த வெள்ளைகோபுரத்தின் வரலாற்றைக் கேட்டபடி கோபுரத்தை அட்டகாசமாய் வரைந்து முடித்தான்.

"அடுத்து உள் ஆண்டாள் சந்நிதில உள்ள வெளி மண்டபத்துலெல்லாம் சிற்பங்கள் பிரமாதமா இருக்கும். அங்கேயே வாசலில் உக்காந்து வரையலாம்!"

எதிராஜ் ஆசைதீர எல்லா இடங்களையும் பார்த்து, பலவற்றை வரைந்து சிலவற்றை மனதில் படம்பிடித்துக்கொண்டான்.

"திவா! ஸ்ரீரங்கம் கோயில்ல ஏதோ ஆகர்ஷணம் இருக்கு. என்னை இது மறுபடி இழுக்கப்போகிறது" என்றான் உணர்ச்சி நிறைந்த குரலில்.

"சரிடா, நீ நிதானமா இன்னும் சிற்பங்களையும் ராமானுஜர் சன்னிதில இருக்கிற ஓவியங்களையும் பார்த்துவா. எனக்கு நேரமாறது, நான் கிளம்பறேன் என்ன?" திவாகர் விடைபெற்றுக்கொண்டான்.

எதிராஜ் உள் ஆண்டாள் சந்நிதியின் வாசலுக்கு வந்தபோது கையில் பூத்தட்டுடனும் துளசி மாலையுடனும் ஒரு சிறுமி எதிர்ப்பட்டாள். பன்னிரண்டு வயதிருக்கும். சீட்டித்துணியில் பாவாடையும் அதே துணியில் பெரிதான சட்டையும் அணிந்திருந்தாள். உடம்பு ஊசிபோலிருந்தது. பார்வையில் ஏதோ வசீகரம் தெரிந்தது. "அண்ணே அண்ணே, துளசி வாங்கிப் போங்கண்ணே. மொழம் ரெண்டணாதான்" என்றாள் கெஞ்சலான குரலில்.

கேட்டபடியே எதிராஜின் கையிலிருந்த பென்சில் ஸ்கெட்ச் ஓவியங்களைப் பார்த்துவிட்டாள். விழிமலர, "நீங்களா வரைஞ்சீங்க? ரொம்ப நல்லா இருக்கே! அதிலயும் அந்த குதிரைவீரன் அப்டியே கோவில் உள்ளாற இருக்குற சிலைபோலவே இருக்குதே. அண்ணே நானும் படம் வரைவேன். வீட்ல வச்சிருக்கேன்," என்றாள் மகிழ்ச்சியான குரலில்.

"அப்படியா?"

"ஆமா..ஆனா வீட்ல நான் வரையத் தொடங்கினாலே நாலு சாத்து சாத்துவாங்க. 'அனாதை துக்கிரிக்கு ஓவியம் கேக்குதோ, போடி, போயி வெராட்டி தட்டி, பூவு பறிச்சி தொடுத்து, வியாபாரம் செஞ்சி, நாலு காசு சம்பாரிச்சி வாடி'ன்னு திட்டுவாங்க... நான் யாருக்கும் தெரியாம கோவில் உள்ள எங்காச்சும் ஓரமா உக்காந்து வரைஞ்சிடுவேன்..."

"பாவம். ஆமா ஏன் உன்னை வீட்ல திட்றாங்க?" குழப்பமாய் கேட்டான் எதிராஜ்.

"அதான் சொன்னேனே நான் அனாதையாம், குப்பைத்தொட்டில கெடச்சவளாம்."

"அய்யோ பாவம். படிக்கலயா? பள்ளிக்கூடம் போகலையா?"

"ம்ம் போனேன். அஞ்சாவதுவரை படிச்சேன். ஐஸ்கூலெல்லாம் அனுப்பலண்ணே. வெரட்டி தட்டவும் பூ கட்டவும்தானே நேரம் சரியா இருக்குது!"

எதிராஜுக்கு அந்தப்பெண்ணைப் பார்க்கவே பரிதாபமாகிவிட்டது.

"படிக்க உனக்கு ஆசை இருக்கா?"

"ம் இருக்குண்ணே..."

"உன் பேர் என்னம்மா?"

"பூங்கோதை."

"ஒருநிமிஷம் இரு... இங்க வெளில கடைல போன் இருக்கா? ஊருக்கு எங்கம்மாகிட்ட பேசணும் உன்னைப்பத்தி."

"இருக்குண்ணே... தெற்குவாசல்ல கடைல போன் இருக்கு. வாங்க கூட்டிப்போறேன்."

ஒடிசலான உடம்பு; துறுதுறுவென்ற கண்கள்; சுருட்டையான கேசம். பூங்கோதை விறுவிறுவென முன்னே நடக்க எதிராஜ் தொடர்ந்தான்.

போனில் சுசீலா, "நல்ல காரியம்டா எதிராஜா. அன்ன சத்திரம் ஆயிரம் வைக்கிறதைவிட ஒரு ஏழை கல்விக்கு உதவறதை பாரதி சிலாகிச்சி பாடி இருக்காரே! சென்னைல என் சிநேகிதி ஒருத்தி சமூக சேவகி. நகரில் பிரபல புள்ளி. அவள் கண்டிப்பா நமக்கு உதவுவா. நான் இப்போவே அவகிட்ட விவரம் சொல்லிடறேன். பூங்கோதையை அவளை வளர்த்தவங்ககிட்ட நல்லபடி சொல்லி சென்னைக்கு கூட்டிப் போயி சேர்த்துடு. தேவையான பணம் அந்த ஏழைக் குடும்பத்துக்குக் கொடுத்துட்டு வா. எல்லாம் நல்லபடியா முடியட்டும் அந்த ரங்கன் க்ருபைல" என்றாள் நிறைவான குரலில்.

'விட்டது சனி' என்பதுபோல பணத்தை வாங்கிக்கொண்டு பூங்கோதையை வளர்த்தவர்கள் அவனோடு அனுப்பிவைத்தார்கள்.

சென்னையில் அந்த அனாதைப் பள்ளியில் பூங்கோதை ஆறாம் வகுப்பில் சேர்ந்தாள். நாலைந்து வருடம்வரை டில்லிக்கு எதிராஜுக்குத் தவறாமல் கடிதம் போடுவாள். நன்றி தெரிவித்துக் கொண்டே இருப்பாள் ஒவ்வொரு கடிதத்திலும். அவளது ஓவியத் திறமையைப் பள்ளியில் ஊக்கப்படுத்தி பல போட்டிகளில் பரிசுகள் வாங்கியதை எல்லாம் எழுதுவாள். திடீரென மாரடைப்பில் எதிராஜின் அப்பா இறந்து போனதற்குக்கூட மிகவும் வருத்தப்பட்டு ஒரு கடிதம் எழுதி இருந்தாள்.

பத்தாம் வகுப்புப் படிக்கிறபோது திடீரென அவள் பள்ளியிலிருந்து ஒருநாள் தந்தி வந்தது. பள்ளிக்கூட உல்லாசப் பயணமாய் இரவு ரயிலில் திருச்சிக்குப் போகிறபோது வேடிக்கை பார்க்கக் கதவருகில் நின்ற பூங்கோதை காவிரிப் பாலத்தில் கால்தவறி விழுந்து ஆடிமாத வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போய்விட்டாள் என்று.

எதிராஜுக்கு அப்போதுதான் கல்யாணம் நிச்சயம் ஆகி இருந்தது. பூங்கோதையைத் தன் தங்கையாய்க் கல்யாணத்தில் தாலிமுடிக்க அழைத்துக் கொள்ளலாம் என நினைத்திருந்தான். சுசீலா அவளுக்குப் பட்டுப்புடவையெல்லாம் வாங்கி வைத்திருந்தாள். இந்த நேரத்தில் இப்படி ஒரு செய்தி வந்ததும் தாயும் மகனும் அலறிப் புடைத்துக்கொண்டு ஓடினார்கள்.

ஒருவாரம் தேடியும் பூங்கோதை உடல் அகப்படவே இல்லையாம். புதைமணலில் சிக்கி உள்ளே போயிருக்கும் என்று முடிவுகட்டினார்கள். அவ்வளவுதான் பூங்கோதை என்பவளின் சரித்திரமே முடிந்துவிட்டது என நினைத்துப் பெருமூச்சுவிட்டார்கள் சுசீலாவும் எதிராஜும்.

*****


அடுத்த ஒரு மாதத்தில் எதிராஜுக்குத் திருமணம் நடந்துவிட அவன் மனைவி மீராவுக்கு எந்தக் கலையிலும் நாட்டமுமில்லை, சராசரிப் பெண்ணாகக் குடும்பம் நடத்த முடியவுமில்லை. எதிராஜ் பல சமயம் தூரிகையுடன் இருப்பது கண்டு கோபம்வர, அது ஹிஸ்டீரியாவில் கொண்டுவிட, வீட்டில் எப்போதும் சண்டைதான், சச்சரவுதான். எதிராஜ் வெறுப்பில் வரைவதையே நிறுத்திவிட்டான்.

தாயார் சுசீலாவுடனும் மீராவுக்கு ஒத்துப்போகவில்லை. "நீயாவது அவளோட சந்தோஷமாய் இருப்பா. நான் காசி ராமேஸ்வரம்னு சுத்தப் போறேன்" என்று சுசீலா புடவை, புத்தகப் பையுடன் கிளம்பிவிட்டாள். காசிபோகும் வழியில் பஸ் விபத்தில் இறந்தும் போனதாய்த் தகவல் வந்தபோது எதிராஜ் நிலைகுலைந்து போனான்.

ஆயிற்று பல வருஷம் கழித்து அரவிந்தன் பிறந்தான் .அம்மாவைப்போல இல்லாமல் அவன் பாட்டியைப் போல வளர்ந்தான். அப்பாவின் மனதை அவன் புரிந்துகொண்டிருந்தான். அதனால்தான் அன்று "அப்பா, உங்களோட சஷ்டியப்தபூர்த்தியக் கொண்டாட வேண்டாம்னு சொல்லிட்டீங்கப்பா... அம்மா மட்டும் உயிரோட இருந்தா ஜாம்ஜாம்னு கொண்டாடி இருப்பேன். ஆனா அம்மா முப்பதியஞ்சு வயசுலெயே கான்சர்ல போவாங்கன்னு யார் நெனச்சாங்க! அப்பா, நேத்து உங்க பழைய ஓவியங்களை எல்லாம் பார்த்தேன். அதுல ஸ்ரீரங்கம் கோயில் சிற்பங்களை நீங்க அனுபவிச்சி வரைந்த விதமே சொல்லுகிறது உங்க மனம் அங்கயே இருக்கிறதுன்னு. இதை நான் எப்பவோ செய்திருக்கணும் இப்போ உங்க அறுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு நீங்க தெற்கே சில கோயில்கள் போய்ட்டுவர ஏற்பாடு செய்துட்டேன். டில்லியைவிட்டு நாம் சென்னைக்கு வந்த இந்த ஒருவருஷமா நீங்க வீட்லயே முடங்கி இருக்கீங்க..உங்கள் தாயாரின் படத்தைப் பார்த்துப் பார்த்து கண்கலங்கறீங்க. வயசான காலத்தில் நீங்க உற்சாகமாக இல்லை. நீங்க மறுபடி படம் வரைய ஆரம்பிக்கணும்ப்பா. அதுக்கு அரங்கன் கோயில் போய்வந்தா அது ஒரு உந்துதலா இருக்கும். உங்களுக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும். ஆபீஸ் வேலை காரணமா நானும் கூடவர முடியாத சூழ்நிலை. நீங்கள் அவசியம் போய்வாங்கப்பா. மனமாறுதலாகவும் இருக்கும்!" என்று ரயிலுக்கு டிக்கட் வாங்கிக் கையில் கொடுத்தான்.

எதிராஜுக்கு எப்போதும் எதையோ இழந்தது போன்ற உணர்வாகவே இருந்தது. எவருடனான போட்டிக்காக நினைவுகளை அசைபோடாமல் தனிமையில் உழன்று எதிலும் பற்றில்லாத நிலையில் இருக்கிறோம்? ஜீவிதம் என்பது போட்டியல்ல. சேர்ந்தும் சார்ந்தும் வாழ்வதே ஜீவிதம் என்று தோன்றியது. நல்ல நினைவுகள் என்பது வியர்க்கிறபோது வீசுகிற காற்று மாதிரி; விரும்புகின்ற மணம் மாதிரி; வீணையை யாராவது போகிற போக்கில் மீட்டிவிட்டுப் போனால் வீசும் தென்றலில் மெல்லிதாய் அதிர்வு கேட்டுக்கொண்டே இருப்பதுபோல, மகனின் பேச்சு எதிராஜை யோசிக்க வைத்தது.

எதிராஜ் புறப்பட்டுவிட்டார்.

வெள்ளை கோபுர வாசலில் நுழைந்ததுமே பின்னோக்கிப்போன நினைவுகளை மணல்வெளியில் அடித்த காற்றின் ஸ்பரிசம் மீட்டுக்கொண்டு வந்தது. வலப்புறம் எதிரே சேஷராயர் மண்டபம் கண்ணில் படவும், அந்த இடத்தில் முன்பு திவாகருடன் நின்று ரசித்த சிற்பங்களையும் உடனே ஓவியம் வரைய மணல்வெளியில் உட்கார்ந்ததையும் நினைத்துக்கொண்டார் அப்படியே உடையவர் சந்நிதியில் உட்பிரகாரத்து ஓவியங்களில் மனதை செலுத்தினார். பாதி ஓவியங்கள் சிதிலமாகி இருந்தன.

அரங்கனை தரிசிக்க கருடமண்டபம் வழியே உள்ளே புகுந்தார். தர்ம தரிசன வரிசையில் அரங்கனின் அன்பர்களோடு அன்பராய் கால்கடுக்க நின்று, பின் க்யூ நகர்ந்து சென்றதில் கடைசியாய் கண்குளிர அரங்கனை தரிசித்துக்கொண்டார். தங்கவிமானத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டார். கிளிமண்டபம் வழியே வெளியே வந்தார்.

தாயாரை சேவித்து ரங்கவிலாசக் கடைகளை நோட்டமிட்டபடி உள் ஆண்டாள் சன்னிதியை நெருங்கினார்.

சன்னிதி உள்ளடங்கி இருந்தது. ஆண்டாள் அரங்கனுடன் ஐக்கியமாகும்வரை பிரவாகமாய்ப் பொங்கினாள். மேகத்தை, மழையை, மயிலை, குயிலை என்று அனைத்தையும் அரங்கனின் காதலுக்கு தூதுவிட்டாள். அவன் கோயில் வந்தபிறகு அவனுக்கு உடையவளானதும் சன்னிதியின் உள்பக்கமாய் அடங்கி அமைதியாய் இருக்கிறாள். ஆழ்வார்களில் ஆண்டாள் சன்னிதிக்கு மட்டுமே இத்தனை பெரிய வெளிவாசல்!

எதிராஜ் சென்றது வாரநாள் ஆனதால் வெளிவாசலில் அதிகம் கூட்டமில்லை. அதனாலேயே அமைதியாய் அனைத்தையும் ரசித்து ஆழ்ந்து அனுபவித்துப் பார்த்தபடி வந்தவருக்கு, ஆண்டாள் சன்னிதி நுழைவாயிலில் மெல்லிய குரலில் பாசுரம் கேட்கவும் நின்றார்..

'பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்
வாரமாக்கிவைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்...'

குரல் வந்த திசையைப் பார்த்தார். அங்கே சிறு மரஸ்டூலில் மூங்கில் கூடையை வைத்து அதில் பரவி இருந்த உதிரிப் பூக்களை வாழை நாரினால் குனிந்ததலை நிமிராமல் தொடுத்துக் கொண்டிருந்த அந்தப் பெண்மணியை நெருங்கினார்.

"பூக்காரம்மா நல்லா பாசுரம் சொல்றீங்களேம்மா... காதுக்கும் இனிமை, ஆழ்வார் பாசுர வரிகள் மனசுக்கும் இனிமை" என்றார் .

'கோரமாதவம் செய்தனன் கொல்....' என்று பாடிக்கொண்டே வந்த அந்தப் பெண்மணி சட்டென பாட்டை நிறுத்திவிட்டு நிமிர்ந்தாள். ஐம்பது வயதிருக்கலாம் மெலிந்த உடல்வாகாய்த் தெரிந்தது. அரக்கிலும் மஞ்சளிலுமாய் கட்டம் போட்ட நூல் புடவையைத் தோளோடு இழுத்துப் போர்த்தி இருந்தாள். நரைத்த அடர்த்தியான சுருட்டைத் தலைமயிரை அழுந்த வாரிக் கொண்டை போட்டிருந்தாள். நெற்றியில் சிவப்பு நிறத்தில் நீளத் திலகம். மருவும் கனகாம்பரமும் மல்லிகையும் சேர்ந்து கட்டிய பூச்சரத்தை கையிலெடுத்தவள். "பூ வேணுமா சாமீ?" என்று கேட்டாள்.

வயதானாலும் துறுதுறுவென்றிருந்த அந்த விழிகளைப் பார்த்த எதிராஜ் சட்டென அதிர்ந்தார். அதற்குள் அவளும் அவரைக் கூர்ந்து பார்த்துவிட்டு, "அண்ணே, எதிராஜ் அண்ணனா?" என்று தழுதழுத்த குரலில் கேட்டாள்

"பூ... பூங்கோதை... நீ... நீயா?" என்று சந்தேகமும் வியப்புமாய் கேட்கும்போதே குப்பென வியர்த்தது எதிராஜுக்கு. அதே குரல்! அதே முகம்! எத்தனை வருடம் ஆனால் என்ன, நெஞ்சில் பதிந்த சில முகங்களின் நினைவு வற்றுவதே இல்லைதான்.

"பூங்கோதை.... நீ இறந்துட்டதா?" குழப்பமும் திகைப்புமாய் எதிராஜ் கேட்டார்.

பூங்கோதை பூச்சரத்தைக் கூடையில் போட்டுவிட்டு எழுந்து நின்று கைகுவித்தாள். கண்கள் கலங்க ஆரம்பித்தன. கை நடுக்கத்தை மறைத்தபடி பேச ஆரம்பித்தாள்.

"அண்ணே...எத்தனை சந்தோஷமா இருக்கு தெரியுமா? ஆமாண்ணே. நன்றி மறந்தவளா நான் உயிரை விட்டுவேனோன்னு நினச்சேன். .நல்லவேளை என் அரங்கன் என்னை அந்தப் பாதகத்திலிருந்து காப்பாத்திட்டான். நான் இறந்துட்டதா ஊர் உலகம் நம்பினதை நீங்களும் நம்பி இருப்பீங்க... ஆனா அன்னிக்குச் சுற்றுலா போன ரயிலில் பாதிராத்திரி அந்தபள்ளி டிராயிங் மாஸ்டர் என்கிட்ட தவறா நடக்கவந்தாரு. அதுக்கு முன்னாடி பலதடவை அவர் பள்ளிக்கூட ஹாஸ்டல்ல தனியா என்னைப் பார்க்க வந்தப்பல்லாம் நான் அவரை எச்சரிச்சிருக்கேன். ஆனா அவருக்கு நான் அனாதை, கேட்க யாருமில்லைங்கிற தைரியம். அரசியலில் செல்வாக்குள்ள மனுஷன் ஒருத்தர்கிட்ட நான் தாசியாப் போகணும்னு மிரட்டினாரு. திட்டம்போட்டு தனக்குச் சாதகமான சூழ்நிலையை ரயிலில் ஏற்படுத்திட்டு என்னை நெருங்க வந்தாரு. அப்போதான் நான் ஒரு முடிவெடுத்தேன். அரங்கன் காலடில போய்ச் சேர்ந்துடலாம்னு அந்த அயோக்கியனிடமிருந்து தப்பிக்க வேற வழி தெரியாம காவிரில பாய்ஞ்சிட்டேன். ஆனா காவிரி என்னைக் கொண்டுபோயி ஒரு நல்லவர் கைல ஒப்படைச்சிட்டா. ஆமாம். அந்த நடு இரவுல காவிரியின் மறுகரைல அதன் அழகை ரசிச்சி கவிதை பாடிக்கொண்டிருந்த ஒரு காஷ்மீரத்து மனிதர் நான் மிதந்து வருவதைப் பார்த்து நீர்ல பாய்ஞ்சு என்னைக் காப்பாத்தினார். பக்கத்துல ஒரு நர்சிங் ஹோம்ல சேர்த்து என் உயிரை மீட்டார். அவர்கிட்ட நான் நதியில் குதித்த காரணத்தைச் சொன்னேன். என்னால திரும்பச் சென்னைக்குப் போக முடியாத நிலைமையை விவரிச்சேன். என்னை அவர் ஓசைப்படாமல் காஷ்மீருக்குக் கூட்டிப் போனார்.

"அன்பான குடும்பம் அவருடையது அங்கே நான் அவருக்கு இன்னொரு மகளா வளர்ந்தேன். 'பூ' என்ற புனைபெயரில் சித்திரங்களை வரைந்தேன். வெளிநாட்டில் எல்லாம் என் சித்திரங்கள் விலை போச்சு. நிறைய சம்பாதித்தேன். அந்தக் காஷ்மீரத்து மனிதர் எட்டு வருஷம் முன்னால இறந்ததும் அந்தக் குடும்பத்திடம் விடைபெற்று இங்கே திரும்பி வந்தேன். அண்ணா, உங்க டில்லி வீட்டு முகவரி எல்லாம் நினைவில் இல்லாமல் போய்ட்டுது. மேலும் நான் இறந்துட்டதா எல்லாரும் நினச்சிட்டு இருக்கிறதை மாத்திக் குழப்பம் உண்டாக்க வேண்டாம்னு நினச்சேன். ஆனால் உங்களுக்கு நான் ஏதோ துரோகம் செய்துட்டதாகவே உறுத்தல் இருந்தது. உயிர் போறதுக்குள்ள என்னிக்காவது உங்களை சந்திக்க அரங்கன் வாய்ப்பளிப்பான்னு நம்பித்தான், உங்களை நான் முதலில் சந்திச்ச இதே இடத்தில் உட்கார்ந்திருக்கேன்....."

நிதானமாய்ப் பேசினாலும் உணர்ச்சிகரமாக நீண்ட நேரம் பேசியதில் பூங்கோதைக்கு மூச்சிறைத்தது.

இன்ப அதிர்ச்சியில் எதுவும் பேச இயலாதவராய் எதிராஜ் அமைதியாய் அப்படியே நின்றார்.

"கோபமா அண்ணா என் பேர்ல?"

"இல்லைம்மா. என்ன பேசறதுன்னே தெரியல....." என்றவர் அவள் கழுத்தில் தெரிந்த மஞ்சள் சரட்டைப் பார்க்கவும் பூங்கோதை மெலிதாகச் சிரித்தாள்.

"அண்ணா! இது அந்தரங்கத் தாலி! ஆமாம். அந்த டிராயிங் மாஸ்டர் அன்னிக்கு யார் யாருக்கோ தாசியா இருக்கச்சொல்லி மிரட்டினான். நான் என்னிக்கும் அரங்கனுக்குதான் தாசி. அரங்கனையே மானசீக புருஷனாய் நினைச்சி நானே எனக்கு ஒரு பாதுகாப்பாய் தாலியைக் கட்டிக்கிட்டேன்."

பூங்கோதை இப்படிச்சொல்லி முடிக்கவும் யாரோ இரண்டு இளைஞர்கள் அங்கே வந்தார்கள். குனிந்து ஏதோ ஃபைலைத் திறந்து காட்டி அவளிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள்.

அவர்களிடம் பூங்கோதை எதிராஜை தான்முதலில் சந்தித்தது முதல் எல்லாவற்றையும் சொல்லி அவரை அறிமுகப்படுத்தினாள்.

உடனே அவர்கள் எதிராஜைப் பார்த்து பணிவுடன், "ஐயா! டவுன்ல இருக்கிற நம்ம எதிராஜ் அனாதை இல்லம், சுசீலாம்மா ஓவியப் பள்ளி ரெண்டையும் நீங்க அவசியம் வந்து பார்த்துப் போகணும்" என்று கேட்டுக்கொண்டார்கள்.

எதிராஜ் சட்டென பூங்கோதையை ஏறிட்டுப்பார்க்க அவள் புன்னகையை பதிலாக்கி அமைதியாய் நின்றாள்.

"ஒவியப் பள்ளியைப் பார்ப்பது மட்டுமல்ல பூங்கோதை, இனிமே என் பணி அங்கேதான்" என்ற எதிராஜின் முகத்தில் நீண்ட நாளைக்குப் பிறகு சிரிப்பு மலர்ந்தது.

ஷைலஜா,
பெங்களூரு, இந்தியா
More

மண்ணின் மணம்
மனச்சாட்சி
Share: 




© Copyright 2020 Tamilonline