Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி
Tamil Unicode / English Search
சிரிக்க, சிந்திக்க
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு
- வற்றாயிருப்பு சுந்தர்|மார்ச் 2009||(1 Comment)
Share:
ரயிலும் அதன் தொடர்பானவைகளும் எனக்கு எப்போதும் சலிக்காது ஆச்சரியமளிப்பவை. பயணிகள், ஊழியர்கள், ரயில் தண்டவாளத்தை ஒட்டி வாழும் மக்கள், வழித்தடங்கள் என்று அது ஒரு தனி உலகம். ஒரு பயணியாக இவற்றைப் பற்றி என்றாவது எழுத வேண்டும் என்று அடிக்கடித் தோன்றும். அவ்வெண்ணங்கள் கரி எஞ்சினின் புகைபோலக் காற்றில் கலந்து கரைந்து விடுகின்றன.

வெள்ளை பேண்ட், கருப்புக் கோட்டு, வெண்கலப் பெயர்பட்டை, கையில் அட்டை, பட்டியல், நெற்றியில் குங்குமம், விபூதி, சந்தனம் ஏதாவது ஒன்றை நிரப்பி, சிவந்த கண்களுடன் ஆவிகள் போல ரயில் முழுதும் பெட்டி பெட்டியாக உலவிக் கொண்டிருப்பார்கள்.
அடிக்கடி பயணிப்பவர்கள் என்று சிலரைப் பார்த்ததும் கண்டுபிடித்துவிடலாம். உலகமே நின்றாலும் கவலைப்படாமல், பெட்டியில் ஏறியதும், படுக்கையை விரித்து காற்றுத் தலையணையை ஊதி, மினரல் வாட்டர் பாட்டிலைத் திறந்து முருகன் இட்லிக் கடையில் வாங்கிய பெட்டியைப் பிரித்து சாப்பிட்டுவிட்டு, ஏறிப் படுத்து விசிலடித்து ரயில் கிளம்புவதற்குள் தூங்கிவிடுவார்கள். தாயைப் பிரிந்து கன்றுக்குட்டி தொடர்ந்து எழுப்பும் ஒலியைப் போல தொடர்ந்து "மசால் வடை, இட்லி பொங்கல், சாயா டீ" என்று இரைந்து ஒலியெழுப்பிக்கொண்டு பாத்திரத்தை ஏந்திக்கொண்டு சில வினாடிகளுக்கு ஒருமுறை கடந்து செல்லும் கான்ட்டீன் ஊழியர்கள்.

பயணச்சீட்டு பரிசோதகர்கள் இன்னும் கொஞ்சம் வினோதமான ஆசாமிகள். வெள்ளை பேண்ட், கருப்புக் கோட்டு, வெண்கலப் பெயர்பட்டை, கையில் அட்டை, பட்டியல், நெற்றியில் குங்குமம், விபூதி, சந்தனம் ஏதாவது ஒன்றை நிரப்பி, சிவந்த கண்களுடன் ஆவிகள் போல ரயில் முழுதும் பெட்டி பெட்டியாக உலவிக் கொண்டிருப்பார்கள். சிரித்த முகத்துடன், சிடுசிடுப்புடன், கண்களைச் சந்திக்காதவர்கள், யாரையும் சோதிக்காதவர்கள் என்று விதவிதமான பரிசோதகர்கள்.

கோவையிலிருக்கும் உறவினர்களைப் பார்த்துவிட்டு நண்பர் கோவை ரவியையும் சந்தித்துவிட்டு வரலாம் என்று சதாப்தியில் கிளம்பினோம். அனல் தாங்காது வாடி வதங்கிய குழந்தைகளைப் பார்த்துப் பாவமாக இருக்க, குளிரூட்டப்பட்ட பெட்டியில் அமர்ந்தோம். எந்த வகுப்பில் சீட்டு வாங்கிக்கொண்டு வந்தாலும் பாதிப்பேர் கதவருகில் நிற்கிறார்கள். விரல்களிடுக்கில் சிகரெட் புகைகிறது. இல்லாவிட்டால் கர்ணனின் கவசகுண்டலம் மாதிரி காதோடு கைப்பேசி ஒட்டியிருக்க ஙமஙமஙம என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கு முந்தைய வாரத்தில்தான் ஒருவர் இப்படி மனைவி உள்ளே உட்கார்ந்திருக்க எழுந்து கதவருகே கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாராம். திருச்சி ஜங்ஷன் வந்துவிட்டது. அவரைக் காணாமல் மனைவி தேட பத்து மைல்களுக்கு அந்தப் பக்கம் தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்திருக்கிறார். அதிவேகத்தில் செல்லும் ரயில் - கதவருகே பாதுகாப்பற்று கைப்பேசியில் மும்முரமாக இருக்க, ஒரு உலுக்கலில் தூக்கி வெளியே வீசி விட்டது! ஆனால் இதெல்லாம் ஒருநாள் செய்தி. யாருக்கும் உறைப்பதில்லை! உண்மையில் காலையில் காப்பியோடு தினத்தந்தி படிக்கையில் விபத்து, கொலை, கொள்ளை என்று ஏதாவது செய்திகள் இல்லாவிட்டால் எதையோ இழந்தாற்போல காப்பியும் தினத்தந்தியும் ருசிப்பதில்லை. ரொம்ப குரூரமானவர்களாகிவிட்டோமோ என்று பயமாகக் கூட இருந்தது.

எங்களுக்கு முன்வரிசை காலியாக இருக்க, ஒரு உம்மணா மூஞ்சிப் பரிசோதகர் வந்து சோதித்துவிட்டுப் போனார். அடுத்த நிறுத்தத்தில் ரயில் நின்றதும், ஒரு நாற்பதுகளிலிருந்த நபரும், அவரது பெண்பிள்ளைகள் இருவரும் மஞ்சள்பைகள் சகிதம் - கிராமவாசிகள் என்று பார்த்ததும் தெரிந்தது - மெதுவாக வந்து காலியான இருக்கைகளில் அமர்ந்தனர். சில நிமிடங்களில் திரும்ப வந்த பரிசோதகர் முகத்தில் அவர்களைப் பார்த்ததும் கேள்விக்குறி. அவர் பின்னால் சலவைச் சட்டைகளில் மூன்று பெரிய மனிதர்கள் பெட்டிகளுடன் நிற்க பரிசோதகரின் விரல்களிடுக்குகளில் ரூபாய்த்தாள்கள் தெரிந்தன. வந்ததும் அந்நபரிடம் "டிக்கட்ட எடு" என்று பயணச்சீட்டைக் கேட்டு வாங்கியவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. "ஏன்யா அறிவில்லை?" என்று தொடங்கி சில நிமிடங்கள் ஏகவசனத்தில் திட்டித் தீர்த்தார். "அன்ரிசர்வடு டிக்கட்டை வாங்கிக்கிட்டு ஏஸில வந்து உக்காந்திருக்கையே - உனக்கு ஏஸி கேக்குதா?" என்று கத்தினார். அவர் பாவமாக ஈனஸ்வரத்தில் "தெரியலைங்க” என்று சொல்ல "ஏஸி குளிர்றது கூடவா தெரியலை? சொரணையில்லை. எந்திரிய்யா? எந்திருச்சி அடுத்த கோச்சுக்குப் போய்யா" என்று கத்த அவர்கள் பைகளை எடுத்துக்கொண்டு பதில் பேசாது வெளியேறிச் சென்றனர். சக பயணியை அவமதித்த அந்த நபரைக் கண்டிக்க நினைத்தாலும் பேசாமலிருந்துவிட்டதை நினைத்து குற்றவுணர்வு இப்போதுகூட உறுத்துகிறது.

கோவை சென்று இரவு ஒன்பதேகாலுக்கு இறங்கி நிலையத்திலிருந்து வெளியில் வந்ததும் சில்லென்று காற்று உடலைத் தழுவியது ஆசுவாசமாக இருந்தது. குளிரூட்டப்பட்ட அறையில் நுழைந்தது போன்ற உணர்வு. ரயில் நிலையத்தின் முகப்பு இங்கேயும் பளிச்சென்றிருக்க, ஒழுங்கான வரிசையில் கால் டாக்ஸிகள் - யாரும் மேலே விழுந்து கையைப் பிடித்து இழுத்துக் கூப்பிடாமல் இருந்தது இன்னொரு ஆச்சரியம். பயணிகளை உடமைகளைப் பாதுகாத்துக் கொள்ளச் சொல்லி காவல்துறையின் இடைவிடாத அறிவிப்பு ஒலித்துக்கொண்டிருந்தது.

கோவைக்குப் பத்து வருடங்களுக்கு முன்பு வந்திருக்கிறேன். தெலுங்குப்பாளையத்திற்குச் செல்லும்போது எனது கோவை ஞாபகங்களை நினைவுபடுத்திக் கொள்ள முயன்றேன். எதுவும் அடையாளம் தெரியவில்லை. எல்லாமே புதிதாக இருந்தது. கோவை பரந்து விரிந்திருக்கிறது. ஆனால் திருச்சி மாதிரி பைத்தியக்காரத்தனமான, ஒழுங்கற்ற, அசுர விரிவாக இல்லாமல் ஒழுங்காகக் காட்சியளித்தது - பிரமையோ என்னவோ. தெலுங்குப் பாளையத்தில் ஒரு கிரவுண்டு நாற்பது லட்சம் என்று சொன்னதைக் கேட்டதும் (98ல் இருபதாயிரமோ நாற்பதா யிரமோ) பக்கத்துப் பெட்டிக்கடையில் இஞ்சி மொரப்பா ஒன்று வாங்கி வாயில் போட்டுக் கொண்டேன். அந்தப் பணத்தில் பாஸ்டனிலிருந்து இருபது மைல் தூரத்தில் நல்ல குடியிருப்புப் பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கிவிடலாம்!
தியான லிங்க தரிசனம்

எளிமையான, காற்றோட்டமான, அமைதியான, நடக்கையில் உள்ளங்கால்களில் பட்டு உடல் முழுவதும் சில்லிப்பு பரவும் கோவில்களை என்றோ இழந்து விட்டோம்.
மறுநாள் டாக்ஸி ஒன்றில் தியான லிங்கம் (ஈஷா தியான மையம்) சென்றோம். வெள்ளியங்கிரி மலையின் மடியில் அமைந்திருக்கும் அந்த தியான மண்டபம் அழகு. உள்ளே மண்டபத்தில் நுழைந்து இருளில் கால் தடுக்காது சென்று - ஆடை உரசும் சத்தம் கூடக் கேட்கக்கூடாது என்பதால் பேண்ட்டை நாலைந்து மடிப்புகள் மடித்துக்கொள்ளச் சொன்னார்கள். பெண்களின் வளையல், கொலுசு இத்யாதிகளைக் கழற்றிக் கைப்பையில் வைத்து வெளியே பாதுகாக்குமிடத்தில் வைக்கச் சொன்னார்கள் - சம்மணமிட்டு அமர்ந்து கொள்ள மகா அமைதி. கண்களை இமைத்தாலே சத்தம் கேட்கும்போல இருந்தது. நடு சென்ட்டரில் லிங்கம். குடுமி வைத்துக் காவியுடையில் சில வெள்ளைக்காரர்கள். சேலை கட்டிய மாதுகள். சிறிது நேரத்தில் அசரீரி போன்று இசையும் மொழி புரியாததொரு பிரார்த்தனைப் பாடலும் வீணையின் நரம்புகளைச் சுண்டுவது போல எழும்பி அதிர்ந்து மண்டபத்தை நிரப்ப அந்த அனுபவம் சில நிமிடங்கள் நீடித்து ஓய மெதுவாக எழுந்து வெளியில் வந்தோம். நெடுங்காலம் கழித்துத் தொடர்ச்சியாகச் சம்மணமிட்டு 20 நிமிடங்கள் அமர்ந்ததில் அடிமுதுகு வலித்தது. ஊருக்குத் திரும்பியதும் உடற்பயிற்சியை மறுபடியும் ஆரம்பித்துவிட வேண்டும் என்று ஆயிரமாவது முறையாகச் சபதமெடுத்துக் கொண்டேன்.

குறிப்பிட்ட நேரத்தில் அவ்விசை இசைக்கப்படுவதாலும், நாங்கள் கிட்டத்தட்ட அது துவங்க ஒரு நிமிட நேரம் இருக்கும் போதுதான் மண்டபத்துக்குப் போனதாலும் அவசர அவசரமாக உள்ளே ஓட வேண்டியிருந்ததாலும் மண்டபத்திற்கு முன்பிருந்த பளிங்குக் குளத்தில் குளிக்க முடியவில்லை. ஆண்கள் பெண்கள் இருவரையும் பிரித்து ஆளுக்கு அரைமணி நேரம் என்ற ரீதியில் மாற்றி மாற்றி குளிக்க விடுகிறார்கள். அங்கேயே வேட்டிகளும், துண்டுகளும் கொடியில் காய்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றை அணிந்து இறங்கிக் குளித்துவிட்டு மறுபடி நமது உடையைப் போட்டுக் கொள்ளலாம். நான் எந்த இடத்திற்குச் சென்றாலும் குளிக்கவொரு சந்தர்ப்பம் கிடைத்தால் விடவே மாட்டேன். போன ஜென்மத்தில் தண்ணீர்ப் பாம்பாகப் பிறந்திருப்பேன் என்று நினைக்கிறேன். சட்டென்று துண்டைக் கட்டிக்கொண்டு படிக்கட்டுகளில் இறங்கிவிட்டேன். உடல் பற்றிய பிரக்ஞையில்லாது பொதுவில் குளித்த காலங்கள் போய், இப்போது லேசாகத்தான் இருந்தாலும் தொப்பை வெட்கப்படுத்தியது. எக்கி அடக்கி இறங்கினேன். "நம்மூரில் மாடு தடுக்கி விழுகிற வரைக்கும் வயசானதை ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள்” என்று சுஜாதா எழுதிய பிறந்ததினக் குறிப்பு நினைவுக்கு வந்தது.

குளம் என்றால் தெப்பக்குளம் போல இல்லை. ஒரு முப்பது படிகள் தரை மட்டத்திலிருந்து கீழே இறங்க இறுதியில் நீச்சல் குளத்தின் நீளத்திற்கு ஒரு பெரிய தொட்டி செவ்வக வடிவத்தில் இருக்க உயரத்திலிருந்து பனிக்கட்டியின் சில்லிப்பில் நீர் தொடர்ச்சியாக விழுகிறது. ஈரப்படியில் கால் வைத்ததும் சில்லிப்பில் மயிர்கூச்செரிந்தது. குளத்தின் நடுநாயகமாகப் பளிங்கில் உள்ளே பாதரசம் நிரப்பிய லிங்கத்தை நிறுவியிருக்கிறார்கள். நீர் மட்டத்திலிருந்து சற்றுக் கீழே முங்கியிருக்கிறது. விழும் நீரில் உடல், மனச் சூடு நீங்க சில நிமிடங்கள் நின்று விட்டு நீந்தி லிங்கத்தை அடைந்து அதைத் தொடும் அனுபவம் வித்தியாசமாக இருக்கும் என்று சொன்னார்கள். அந்தக் குளிர்நீரில் குளித்ததே மனதை அமைதியாக்கிவிட்டது. லிங்கத்தைத் தொட்டேன். குளிர் நீரிலும் சில்லென்றிருந்தது லிங்கம்.

தியான லிங்கத்தின் சூழ்நிலை அமைதி மனதை அமைதிப்படுத்தியது என்பதைக் குறிப்பிட்டாகவேண்டும். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன்பெல்லாம் விசேஷ நாட்களில் கூட்டம் முண்டியடித்துக்கொண்டிருக்கும் - இப்போது 365 நாட்களும் கூட்டம் அம்முகிறது. பணம் புழங்குமளவிற்கு எல்லாருக்கும் கஷ்டங்களும் பெருகிவிட்டன போலும். கைக்குழந்தைகளைக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு ஏராளமான பெண்களும், வயசாளிகளும் கோவில்களில் நிரம்பியிருக்கிறார்கள்.

எளிமையான, காற்றோட்டமான, அமைதியான, நடக்கையில் உள்ளங்கால்களில் பட்டு உடல் முழுவதும் சில்லிப்பு பரவும் கோவில்களை என்றோ இழந்து விட்டோம்.

இன்னும் வரும்...

வற்றாயிருப்பு சுந்தர், பாஸ்டன்
Share: 




© Copyright 2020 Tamilonline