Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அஞ்சலி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | சிறப்புப் பார்வை | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | சிறுகதை | வாசகர்கடிதம் | ஹரிமொழி
Tamil Unicode / English Search
அலமாரி
புயற்காற்று
- |டிசம்பர் 2022|
Share:
புதுச்சேரியில் நள வருஷம் கார்த்திகை மாசம் 8-ந் தேதி புதன்கிழமை இரவில், அபாரமான புயல்காற்றடித்தது. பெரிய கிழவர்கள் தங்கள் வாழ்நாளிலே அதைப் போன்ற புயலை என்றும் பார்த்ததில்லை என்று கூறுகிறார்கள். சாயங்காலத்திலிருந்தே காற்றுத் தேவன் ஊத ஆரம்பித்துவிட்டான். எப்படிப்பட்ட காற்று! கூ...கூ... வென்று விண்ணைக் குடைந்திடும் காற்று. கும்மிருட்டு. என் தந்தையார் இரவுகளில் அரவிந்தர் வீடு சென்று வேத ஆராய்ச்சி செய்வார். அங்குதான் இராப் போஜனத்தை யனுப்புவோம். இரவு ஒன்பது மணிக்குமேல்தான் அவ்விருவரும் ஆராய்ச்சியிலீடுபடுவார்கள். பின்பு விடியற்காலை ஐந்து மணிவரைக்கும் அவ்விதமே உட்கார்ந்திருப்பார்கள். இருவருக்கும் களைப்போ, சோர்வோ உண்டாவதில்லை. வழக்கம்போல், அன்றும் மாலை ஆறு மணிக்குத் தந்தையார் புறப்பட்டார்.

என் தாயார்: இன்று போகாவிட்டால் என்ன? மழையும் காற்றுமா யிருக்கிறதே!

தந்தை: ஒன்றுக்கும் அஞ்சாத நீ, இந்த இடிக்கும் மழைக்கும் பயப்படப் போகிறாயா?

தாயார்: இல்லை. என் மனம் எதனாலோ இன்று அதைரியமடைகிறது.

தந்தை: ஒரு நல்ல காரியம் செய்யப்போனால் அதற்கு எத்தனை தடை!

இதற்குள் நான், என் தங்கை பாப்பா எல்லோருமாகச் சேர்ந்துகொண்டு அப்பா போவதை நிறுத்திவிட்டோம். தந்தையும் இதைக் கேட்டு மனம் சலனமடைந்தார். சமாதானமின்றி, அப்படியும் இப்படியும் உலாவினார். சரியாக போஜனமும் அருந்தவில்லை. ஒன்பது மணியிருக்கும். வாயுதேவன் சீறி எழுந்தான், கோபமூட்டப் பெற்ற புலியைப்போல. பிரளயத்தில் ஏற்படும் என்கிறார்களே, அதுபோல் மழையும் வெள்ளமும். தெருக்களில் தண்ணீர் ஒரு ஆள் ஆழம் ஓடுகிறது. புதுவையில் தென்னை மரம் அதிகம். காற்று ஆரம்பித்ததும், சடசட வென்று மரங்கள் சாய்ந்தன. வீடுகள் இடிந்து விழுந்தன. மரங்கள் விழுந்ததால் மின்சாரக் கம்பிகள் அறுந்து, விளக்குகள் எல்லாம் அணைந்து, ஊர் பூராவும் ஒரே அல்லோல கல்லோலம்! நாங்கள் அன்றுதான் வேறு வீட்டிற்குக் குடி வந்திருந்தோம். (அதாவது முன்பிருந்த வீட்டிற்கு எதிர்வீடு) எங்கள் வீட்டு மாடியிலும் நாலைந்து மரங்கள் சாய்ந்தன. தந்தையார் தாயாரிடம் சொன்னார். "பெண்கள் தெய்விகத்தன்மை பொருந்தியவர்கள் என்பதை இன்றுதான் பிரத்யக்ஷமாகக் கண்டேன். அதனால் தான் நான் இன்று வேத ஆராய்ச்சியைக்கூட நிறுத்தினேன். உன் மனத்தில் 'ஏதோ சம்பவிக்கப் போகிறது' என்று தோன்றிவிட்டது. கஷ்டப்படும்போது எல்லோரும் ஒன்றாயிருந்து அதை அனுபவிப்பதே நல்லது என்பதற்காகத்தான் நான் போகாமலிருந்தேன்."

தாயார்: காரணம் தெரியாமல் என் மனம் இன்று கலங்கிற்று. ஏதாவது உற்பாதம் ஏற்படாதிருக்க வேண்டுமே என்றுதான் உங்களை வழிமறித்தேன்.

தந்தை: வானம் உறுமுகிறது! உலகம் நடுங்குகிறது! நாம் இப்பொழுது ஏதாவது செய்யமுடியுமா! பராசக்தியைத் துதித்து, துன்பம் வராமல் காக்கச் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை.

தாயார்: ஐயோ! நேற்று நாமிருந்த வீட்டில் தென்னை மரங்கள் சாய்ந்து மாடியின் ஒரு பாகம் இடிந்து விழுகிறதே! எல்லோரும் அலறும் சத்தமும், அதற்குமேல் வாயுவின் உறுமலும் என்னை திக்பிரமையடையச் செய்கிறதே! இது என்ன காற்று! இது என்ன இன்று யுகமுடிவா! தெரியவில்லையே!

தந்தை: செல்லம்மா! இவ்வளவு தூரம் மனத்தைக் கலங்கவிடாதே! இதோ ருக் வேதம் படித்துப் பொருளுரைக்கின்றேன். அரவிந்தர் வீட்டில் வாயுவின் ஸ்தோத்திரம்தான் படிப்பதென்று நினைத்திருந்தேன். இதோ பிரத்யக்ஷமாகவே அவனைத் தரிசித்தேன். ஒரு கெடுதலும் வராது, தேவியின் அருளால். அவன் சக்தி குமாரன், என்று இப்படிப் பேசிக்கொண்டிருக்கும் போதே, சூறாவளிக் காற்றடித்து, மழைத் தண்ணீர் யானைத் துதிக்கையால் பாய்ச்சுவதுபோல வீட்டுக்குள் வந்து விழுந்தது. காற்று, ஜன்னல் கதவுகளை உடைத்து கண்ணாடிகளை யெல்லாம் தூள் தூளாக்கி விளக்கையும் அவித்தது. தாயும், தந்தையும் அந்த மாடியில் சற்று ஒதுக்குப்புறமாய் எங்களை இருக்கச் சொல்லிவிட்டு, ரொம்ப சிரமப்பட்டு விளக்கேற்றி, சுற்றும் சாமான்களை வைத்து மறைத்தார்கள். ஒரு விதமாக விளக்கு அணையாமல் நின்றது.

தந்தை: செல்லம்மா! ஊழிக் காலத்து முடிவும் இவ்விதம்தான் இருக்கும். உலகம் ஜலப்பிரளயம். ஓடும் நீர் அந் நதித் தண்ணீர். சக்தி காற்றாக மாறிவிடுவான். சிவன் வெறிகொண்டிருப்பான். காற்று நீரைச் சிதறடித்து, ஆகாசத்தில் மின்னை விளைவித்து, நீரை நெருப்பாக்கி, நெருப்பை நீராக்கி, நீரைத் தூளாக்கி, தூளை நீராக்கி, சண்ட சண்டமாருதம் செய்து, இந்த விதமாக யுகமுடிவு செய்வான். காற்றே நம்மைக் காப்பான். மேகங்களை ஒன்றோடொன்று மோதச் செய்து, இடிக்கப்பண்ணி, கடலைக் கலக்கி, மண்ணைப் புரட்டி விளையாடுகிறான்.



"காற்றே! ஒளியே! வலிமையே! உன்னை வணங்குகிறேன். காற்றே! உயிரே! அகில உலகத்திற்கும் உயிரளிக்கும் தேவனே! நீயே உயிர் என்றால் உன்னால் அதை அழிக்கமுடியுமா? எனவே உயிர் அழியவில்லை. உன்னோடு கலக்கிறது. சிறிய உயிர் அகண்டமான உயிரோடு சேருகிறது. மரணம் இல்லை."

தாயார் இது கேட்டுச் சிறிது தைரியம் பெற்றார். இப்போது எங்களுக்கு அந்தச் சம்பவங்களை நினைக்கும்போது மயிர் கூச்சிடுகிறது. மெய் சிலிர்க்கிறது. பின்னும் மழையும் காற்றும் நிற்கவில்லை. தந்தையார் அந்த அற்புதத்தை, சக்தியின் விளையாட்டைக் கண்டு வியந்து, பின்வரும் பாட்டை பாடிக்கொண்டு குதிக்கலானார்.

திக்குக்கள் எட்டுஞ் சிதறி - தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தித்தோம்
பக்க மலைகளு டைந்து - வெள்ளம்
பாயுது பாயுது பாயுது தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம் - அண்டம்
சாயுது சாயுது சாயுது பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று - தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தித்தோம்


வெட்டி யிடிக்குது மின்னல் - கடல்
வீரத்திரை கொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம் - கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையு மிடிய - மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!


அண்டம் குலுங்குது, தம்பி! - தலை
ஆயிரந் தூக்கிய சேடனும்பேய் போல
மிண்டிக் குதித்திடு கின்றான்; - திசை
வெற்புக் குதிக்குது; வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்; - என்ன
தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்!
கண்டோம் கண்டோம், கண்டோம் - இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!


தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

பின்பு காலை ஆறுமணிக்குப் புயற்காற்று அடங்கிற்று.
(பாரதியாரின் புதல்வி தங்கம்மாள் பாரதி எழுதிய 'பாரதியும் கவிதையும்' நூலில் இருந்து)
Share: 




© Copyright 2020 Tamilonline