Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | பொது | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | சிரிக்கச் சிரிக்க | அஞ்சலி
Tamil Unicode / English Search
கதிரவனை கேளுங்கள்
ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-18a)
- கதிரவன் எழில்மன்னன்|மே 2021|
Share:
முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து இதை வடிவமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்ட உத்தேசம்.

★★★★★


கேள்வி: நான் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க உள்ளேன். ஆரம்பிக்கும் முன்னமே என் யோசனையைப் பற்றி பொது ஆரம்பநிலை அனுபவமும் அத்துறையில் நிபுணத்துவம் உடையவர்களிடமும், வருங்கால வாடிக்கையாளர்களிடமும் கலந்தாலோசிப்பது அத்தியாவசியம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் அப்படிச் செய்தால் யாராவது என் யோசனையைத் திருடி என்னுடனேயே போட்டிக்கு வந்து விடுவார்கள் என்று நான் தயங்குகிறேன். என் தயக்கம் சரியானதா? அல்லது, அதைத் தள்ளி வைத்து விட்டு கலந்தாலோசிப்பதே நல்லதா? விளக்குங்களேன்.
கதிரவனின் பதில்: உயர்மட்ட அளவில் சொல்ல வேண்டுமானால் பதில் மிக எளிது, ஆணித்தரமாகக் கூறிவிடலாம். உங்கள் தயக்கத்தைத் தூக்கி உடைப்பில் போட்டுவிட்டு உடனே ஓடி, கலந்தாலோசியுங்கள்! அது அத்தியாவசியந்தான். என்ன, பதிலை இத்தோடு நிறுத்திக் கொள்ளலாமா? சரி, சரி, விளக்கம் தராமல் முடித்துக் கொள்வேன் என்ற கவலை வேண்டாம் வாசகரே! இதோ மேற்கொண்டு இந்த விஷயத்தின் உள்ளம்சங்களை விவரிக்கிறேன்.
முதலில், ஏன் அப்படி அடித்துச் சொல்கிறேன் என்பதற்கான காரணங்களை மேலோட்டமாகப் பட்டியலிடுவோம்:

1. ஒரு டாலருக்கு பத்து யோசனைகள்: முக்கியத்துவம் மிகக்குறைவு
2. வளர்ச்சியில் (அல்லது தோல்வியில்) நேரும் யோசனை மாற்றங்கள்
3. கரப்பான் பூச்சிகள் (என்னடா இது என்கிறீர்களா, பொறுமை! பின்பு விளக்குகிறேன்!)
4. இறகுபோல் மெல்லிய யோசனை: ஊதினால் பறந்து விடுமோ!

இப்போது மேற்கண்ட காரணங்களை ஒவ்வொன்றாக விவரிப்போம்.
இந்த விஷயத்தில் முதலாவதாக மனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், நான் முன்னர் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தபடி, ஆரம்பநிலை நிறுவனத்தின் வெற்றிக்கு அது ஆரம்பிக்கும் போது இருக்கும் யோசனையின் முக்கியத்துவம் ஒப்பீட்டளவில் குறைவு (relatively less important) என்பதுதான்! வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் குழுவின் செயல்பாட்டுத் திறனும் (ability to execute), ஒற்றுமையும், இன்னல்களைச் சகித்துச் சமாளித்து முன்னேறும் மனப்பாங்கும் சக்தியும்தான்!

அதனால்தான் முதலில் நிதியளிக்கும் ஆரம்பநிலை மூலதன நிறுவனங்கள் ஆரம்ப யோசனைகளை நம்பி மூலதனமிடுவதில்லை. யோசனை என்ன யோசனை, டாலருக்குப் பத்து யோசனைகள் கிடைக்கும் என்பார்கள். ஆரம்பிக்கும் குழு நல்லதாக இருந்தால், மேலும் யோசனை குறிவைக்கும் வணிகச்சந்தை பெரியதாக இருந்தால் அவர்கள் போகப்போக நிலைமைகளைக் கணித்து, சரியான யோசனைக்கு ஒன்றிணைந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையால்தான் மூலதனமிட முன்வருவார்கள்.
இதற்கு என் அனுபவத்திலிருந்து சில உதாரணங்களை அளிக்கிறேன். எக்ஸோடஸ் நிறுவனம் ஆரம்பித்து நிறுவனர்களான சந்திரசேகரும், ஜகதீஷும் பலரோடு கலந்தாலோசித்து பலரிடம் முதலீடும் நாடினர். அவர்கள் ஏற்கனவே மற்றொரு நிறுவனத்தை நிறுவி ஓரளவு வெற்றியடைந்திருந்ததால், கன்வல் ரேக்கி, சுஹாஸ் பாட்டீல் போன்றோர் அவர்களின் ஆரம்ப யோசனையைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படவில்லை. ஆனால் அவர்கள் மின்வலை மிகவேகமாக வளரப் போகிறது, அதனால் அதில் தொடர்பளிக்கும் நிறுவனம் ஒன்றுக்கு வெற்றி வாய்ப்பதிகம், குழுவும் நன்றாக உள்ளது (குழுவில் அடியேனும் இருந்தேன்!) என்று கருதி முதலீடளித்தனர். "நீங்கள் எப்படி ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் மாதத்துக்கு பல்லாயிரம் டாலர் கணக்கில் வருமானம் பெறப் போகிறீர்கள் என்று இன்னும் புரியவில்லை, ஆனால் அதை நீங்கள் எப்படியாவது கணித்து விடுவீர்கள் என்று நம்புகிறோம்" என்று கூறினர்.

அவர்களின் நம்பிக்கை வீண்போகவில்லை! மின்வலைத் தொடர்பில் பல வாய்ப்புகளை ஆராய்ந்த எக்ஸொடஸ் குழு, முதலில் நிறுவனங்கள் தங்கள் கிளைகளை மின்வலையோடு பிணைப்பிக்கும் சேவையை அளித்து வந்தது. ஆனால் போகப்போக, கிளைகளைப் பிணைப்பிப்பதை விட, மின்விலை மூலம் மென்பொருள் சேவை அளிக்கும் நிறுவனங்களின் சேவைக் கணினிகளை தகவல் மையங்களில் நிறுவி, அந்தத் தகவல் மையங்களை பல தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மின்வலைகளோடு வலைப்பிணைப்பு (telecom network peering) அமைப்பதே பத்து மடங்கு அதிக வருமானம் அளிக்கும் என்று கணித்தது எக்ஸோடஸ் குழு.

மின்வலைத் தொடர்பு என்ற மேலோட்டமான யோசனையை ஆராய்ந்து ஆராய்ந்து, மின்வலை மற்றும் மூலதன நிறுவனர்களுடன் கலந்தாலோசித்ததால் தகவல்மைய மின்வலைத் தொடர்பு என்னும் குறிப்பிட்ட யோசனையைக் கணித்து வெற்றிபெற முடிந்தது. இணையத் தரவு மையம் (internet data center) என்னும் புதிய வணிகச் சந்தையையே ஆரம்பிக்க முடிந்தது. இந்த யோசனை அதே வடிவில், பல நிறுவனங்களின் இணைவின் மூலம் எக்ஸோடஸை வாங்கிய ஸெஞ்சுரி லிங்க், எக்வினிக்ஸ் மற்றும் கோர்ஸைட் போன்ற பல நிறுவனங்கள் பெரிய அளவில் நடத்துகின்றன.

இப்போதைய மென்பொருள் சேவை நிறுவனங்கள் மற்றும் மேகக்கணினித் துறை போன்ற பெரும் வணிகச் சந்தைகள் எக்ஸோடஸ் கண்டறிந்த இணையத் தரவு மையத் துறையை அடிப்படையாகக் கொண்டவை என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆரம்பித்த போது இருந்த யோசனை மிகப் பொதுவானது, எளியது என்றாலும், மிகப் பெரிய போக்கைத் தளமாக வைத்திருந்ததால், பலருடன் கலந்தாலோசித்ததால் நல்லதொரு குறிப்பிட்ட யோசனையைச் சென்றடைய முடிந்தது.

அதையே மேலும் விளக்குவதற்கு என் அனுபவத்திலிருந்தே மற்றொரு உதாரணமும் உள்ளது! ஆன்க்கீனா என்னும் நிறுவனத்தை மற்ற சில நிறுவனர்களுடன் சேர்ந்து ஆரம்பித்தோம். ஊடக நுகர்வோர் (media consumers), திரைப்படங்கள், தொலைக்காட்சி, யூட்யூப் போன்ற வீடியோக்களை மின்வலை மூலம் பெருவாரியாக தருவித்துக்கொள்ள ஆரம்பித்த தருணம் அது.

அப்போது எங்களுக்கு எழுந்த யோசனை என்ன, அதில் நாங்கள் என்ன வழிமுறையைக் கையாண்டோம் என்பதையெல்லாம் பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline