Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | சமயம் | பொது
கதிரவனை கேளுங்கள் | அஞ்சலி | ஹரிமொழி | வாசகர்கடிதம் | மேலோர் வாழ்வில் | கவிதைபந்தல் | சிறுகதை | சாதனையாளர் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அன்புள்ள சிநேகிதியே
பயம் அவசியம்!
- சித்ரா வைத்தீஸ்வரன்|ஏப்ரல் 2020|
Share:
அன்புள்ள சிநேகிதியே:
(இது வாசகர் கடிதம் அல்ல. சில நாட்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து ஒருவர் என் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அழைத்து ஒரு அன்பு வேண்டுகோள் விடுத்தார். இப்போது இருக்கும் சூழ்நிலை எல்லோருக்கும் ஒரு பயத்தை ஏற்படுத்துவதால், ஏதேனும் என் கருத்துக்களை இந்தப் பகுதியில் வெளியிடக் கூறினார். அதனால்...)

. (ஒரு புள்ளி) இதைவிட மிகச்சிறிய Micro-Micro-Organism. உலகத்தில் அத்தனை நாடுகளும் சேமித்து வைத்திருக்கும் ஏவுகணைகளுக்கும், அணு ஆயுதங்களுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு, இதுதான் 'பிரளயமோ' என்று எல்லோரையுமே அலறவிட்டு, கதறவிட்டு, பதறவிட்டு பறந்து பறந்து அடிக்கும் நுண் எதிரி. மூன்று மாதங்களாகக் காற்றில் ஒலிக்கும் ஒரே சொல் அதுதான். பயமில்லாமல் எப்படி இருக்கும் இப்போது! "பீதிதான் இப்போது வியாதி".
எனக்கும் வந்துவிடுமோ என்ற பயம். பொருளாதாரம் நசுங்கிவிட்டதே என்ற பயம். குழந்தைகள் படிப்பு கெட்டுவிட்டதே என்ற பயம். குடும்பத்தின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறதோ என்ற பயம். இந்தியாவில் முதியோர் குடியிருப்பில் இருக்கும் பெற்றோர்களின் நிலைமை பற்றிய பயம்.

ஓடி ஒளிந்துகொள்ள ஒரு இடம்கூட இல்லையே, வீட்டிலேயே இருந்தால் சித்தம் பேதலித்துவிடுமோ என்ற பயம். விரைவிலேயே பாலுக்கும், பருப்புக்கும் அரிசிக்கும் பஞ்சம் வந்துவிடுமோ என்ற பயம்.

வெவ்வேறு இடத்தில் தனித்தனித் திடல்களில் தனியாக மாட்டிக் கொண்டிருக்கும் நம் குடும்ப அங்கத்தினரைப் பார்க்காமலேயே இருந்து விடுவோமோ என்ற பயம்.

இந்த பயத்தால் நாம் ஒரு நம்பிக்கையிழந்த, கையாலாகாத்தனமான நிலைக்குத் தள்ளப்படுகிறோம். கோபம், சோகம், கவலை, ஆத்திரம் என்று அத்தனை எதிர்மறை உணர்ச்சிகளுக்கும் ஆளாகிறோம். இந்த நிலையில் 'பயப்படாதீர்கள். பயப்படாமல் இருக்கப் பாருங்கள்' என்று வெறும் வார்த்தைகளைச் சொல்வதால் பயத்தைப் போக்கமுடியாது. பயம் என்பது அவசியம். அது பீதியாகப் போகும்போதுதான் உடல் சுருங்கி, உள்ளம் சுருங்கி ஒன்றும் இல்லாமல் போய்விடுவோம்.

இப்போது தோன்றியிருக்கும் பயத்தின் சிந்தனைப் போக்கை மாற்றும்போது, அதன் வீரியம் குறைகிறது. யோசித்துப் பாருங்கள். இது ஒரு Purification process for the entire human kind. உடலும் மனதும் இந்தப் பயம் என்ற நெருப்பில் புடம் போடப்பட்டு, சுத்தமாக வெளிவருகிறோம்.

* Personal Hygeine பல மடங்கு உயர்த்தப்பட்டு அதைப் பழக்கமாக மாற்றிக்கொண்டு வருகிறோம்.
* நம் பணம், பதவி, புகழ் எல்லாம் ஒன்று சேர்ந்து நமக்குள் ஏற்பட்டிருக்கும் மமதையும், கர்வமும் அடக்கப்பட்டு, நமக்கும் மேலே ஒரு சக்தி தன்னை அடையாளம் காட்டிக்கொண்டு, இந்தப் பிரபஞ்சத்தில் நாம் ஒரு தூசி என்பதைத் தெளிவாக, ஆழமாக, உள் மனதில் செலுத்துகிறது. மனம் பண்படுகிறது. We are humbled.
* எவ்வளவுதான் சுயநலத்தில் கவனம் செலுத்தினாலும் சமுதாயப் பொறுப்புணர்ச்சியையும் அதிகப்படுகிறது. Physical distancing. Catch 22 Situation.
* ஒரே குடும்பமாக ஒன்றாகச் சாப்பிட்டு எவ்வளவு நாளாகிறது? குழந்தைகளுடன் விளையாடி, அவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி, தினந்தினம் புதுச் சமையல் என்று 'quality time' dedicated only to family and family. ENJOY THE MOMENTS. சண்டை, சச்சரவுகளைப் பொருட்படுத்தாதீர்கள். இந்தக் காலம் மறுபடியும் எப்போது கிடைக்கும் என்று தெரியாது.
* தினமும் அப்பா, அம்மா, அண்ணா, அக்கா, தங்கை என்று ஃபேஸ்புக்கில், வாட்ஸப்பில் பேச நேரம் கிடைக்கும்போது, அந்தப் பெற்றோர்கள் எவ்வளவு சந்தோஷப்படுகிறார்கள்.
* பொருளுக்குப் பற்றாக்குறையே இல்லாத நாட்டில் வாழும் நாம், wastege என்றால் என்ன, 'சிக்கனம்' என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொள்கிறோம். 'Ceiling on Desires' பற்றித் தெரிந்துகொள்கிறோம்.
* பல மில்லியன் மக்கள் வேலையின்றி, இன்சூரன்ஸ் இன்றி, தங்க இடமின்றி, உணவில்லாமல் தவிக்கும்போது, நாம் தனிப்பட்டதைப் பற்றிக் குறை சொல்லாமல் பக்குவமாக அதை ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டோம் இல்லையா!
* பங்குச் சந்தை சரிந்துவிட்டது. வேலை வாய்ப்பு மீண்டும் இருக்குமா என்று தெரியவில்லை. உண்மைதான். ஆனால், எல்லோருக்கும் அதே நிலைதானே. "Why me?" என்று யாரைக் கேட்கமுடியும் என்று நம் மன நிலைப்பாட்டையும் நாம் மாற்றிக்கொண்டு விட்டோம்.
* அரக்கப்பரக்க வேலைக்குப் போய்க்கொண்டு, left over-ஐச் சாப்பிட்டுக் கொண்டு, வார இறுதியிலும் ஆயிரத்தெட்டு குழந்தைகளைச் சார்ந்த வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு, எதையுமே ரசிக்க முடியாத வேகத்தில் போய்க்கொண்டிருந்தது போக, இப்போது மியூசிக், பெயின்டிங், கார்டனிங் என்று மனதில் இருத்தியிருந்த ஆசைகளைக் காத்துக்கொள்ள அருமையான நேரம் என்று உணர்ந்துவிட்டோம், இல்லையா!
* Air-Pollution, Noise Pollution எல்லாம் கட்டுப்பட்டு வருகிறது. நம் பெரியவர்கள் உபவாசம் என்ற பெயரில் ஒருநாள் சாப்பிடாமல் இருப்பார்கள். நம் ஜீரண மண்டலத்துக்கு ஒருநாள் ஓய்வு. சிறு வயதில் எனக்கு அந்தச் சித்தாந்தங்கள் புரியவில்லை. அதுபோலத்தான் இந்த வீட்டு அமைப்பும்.
* அந்தக் காலத்தில் நாம் கடைப்பிடித்த விதிமுறைகளை இப்போது பெருமையுடன் ஆராய்ந்து பார்க்கிறோம். பள்ளியில் படித்த அந்த நாட்களில் சென்னையிலிருந்து கிராமத்திற்கு விடுமுறை நாட்களைக் கழிக்கப் போவோம். பக்கத்து வீட்டுப் பெண்களுடன் பாண்டி விளையாடப் பிடிக்கும். ஆனால், பெரியம்மாவின் சர்வாதிகாரம் பிடிக்காது. வீட்டுக்குள் நுழைந்தவுடன் பின்னால் சென்று குளிக்க வேண்டும். அப்புறந்தான் காஃபி, டிஃபன் எல்லாம். I Hated it. காலையில் எழுந்தவுடன் குளிக்கவேண்டும். போர்.. போர்.. போர். அந்தத் தெருவில் யார் வீட்டின் முன்புறத்திலாவது வேப்பிலை கட்டித் தொங்கவிட்டிருந்தால். அந்த வீட்டுக்குப் போகக்கூடாது. அங்கே யாருக்கோ அம்மை வார்த்திருக்கிறது. அதனால் எனக்கென்ன? தெரியாமல் போக முயல்வோம். ஆனால், அந்த வீட்டிலும் அனுமதிக்க மாட்டார்கள். இப்படி எத்தனையோ கட்டுப்பாடுகள். நகரத்தில் பிறந்து வளர்ந்த பெண்! பெரியம்மா பட்டிக்காடு. பாட்டி வீட்டில் எந்தச் சலுகையும் இருக்காது என்ற நினைப்பில்தான் வளர்ந்தேன். இப்போது பெருமையுடன் நினைக்கிறேன்.
* எந்த நிலையும் அந்த நிலையில் நிலைத்ததில்லை. இதுவும் கடந்து போகும். நாம் பொறுப்பாக இருக்கிறோம். பாதுகாப்பாக இருக்கிறோம். பொறுமையாக இருக்கிறோம். கட்டுப்பாடுடன் இருக்கிறோம். கடமை உணர்வோடு இருக்கிறோம். கனவோடு இருக்கிறோம். ஒவ்வொரு தினத்தையும் ரசித்து அனுபவிக்கிறோம். நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.

இதை முடிக்கும் தருவாயில் எனக்குச் சில வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. இதேபோல ஒரு நிலையில், நான் எனக்கே எழுதிக்கொண்ட ஆட்டோ கவுன்சலிங்கா என்று தெரியவில்லை. ஒரு பகுதி மட்டும் ஞாபகம் வந்தது. கவிதை வரிகள் இல்லை. கருத்து மட்டும்.

கவலையால் பதைத்து நிற்கும் ஒரு பெண்ணைப் பார்த்து இயற்கை அன்னை சொல்கிறாள்:
"கண்ணைத் திறந்து பார் கண்ணே. உன் வாழ்க்கைத் தோட்டத்தில் ஒரு அருமையான தினமலர் பூத்திருக்கிறது. அந்த நாள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதன் போக்கிலேயே அனுபவித்து விடு" என்கிறாள்.

எனக்கும் உண்டு எரிமலைக் குமுறல்
எனக்கும் உண்டு நிலமகள் நடுக்கம்
எனக்கும் உண்டு பனியும், பாலையும்
எனக்கும் உண்டு வறட்சியும் வெள்ளமும்
தளர்ச்சியில் நானே தயங்கி நின்றால் - மனித
வளர்ச்சிக்கு இங்கே இடம் ஏது?

ஆகவே கலங்காதே என் கண்ணே..

வண்ண மலர் இன்று வாடும் முன்பே
ரசித்திடு அதனை முழுவதுமே
தளரும் மனதுக்குத் தாழ் போட்டு
வளரும் நம்பிக்கை வழி தருவாய்
நறுமணம் சுமந்து புதிய மலர்
நாளைய தினம் மீண்டும் மலரும்.


(கவிஞர்கள் மன்னிப்பார்களாக)
நேரம்தான் கிடைத்திருக்கிறதே என்று நிறைய எழுதிவிட்டேன். பயம் இருக்கட்டும். ஆனால், பீதியாக வியாதியை நாம் வரவழைத்துக் கொள்ளமாட்டோம்.

வாழ்த்துக்கள்,
மீண்டும் சந்திப்போம்.,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்
Personal Queries: drcv.listens2u@gmail.com
Share: 




© Copyright 2020 Tamilonline