Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
வாசனை
- அபிலாஷ் ஆர்|ஆகஸ்டு 2017|
Share:
மகிழ் கவனமாக பைக் கண்ணாடியில் தலை சீவிக்கொண்டான். பேராசிரியர் வீட்டு வாசலில் நாய் இருக்கும் அடையாளம் இல்லை. ஆனால் நிறையப் பூந்தொட்டிகள் தாறுமாறாய் அடுக்கப்பட்டிருந்தன. வாசல்பக்கத் தொட்டிகளில் ஜெவ்வந்தி மற்றும் வண்ணப்புள்ளி குரோட்டன்ஸ். இரண்டு பெரிய தொட்டிகளில் சூரியகாந்திப் பூக்கள் மெல்லத் தள்ளாடின. கறுத்த ஈரமண். முன்புறத் தொட்டிகள் இருந்த இடத்தில் கசிவின் தடம். பின்புறம் தொட்டிகளில் மிளகுச்செடி, சாம்பிலை குரோட்டன்ஸ் எனப் பலவகைகள். ஆனால் அவை வாடி நின்றன. சில தொட்டிகள் இடுப்பு நொறுங்கி வேர்க்குவியல் சரிய சுவரில் சாய்ந்து நிதானித்தன. வாசல் கதவுக்கு மேலே ஒரு பூக்கொடித் தொட்டி கம்பிப் பிணைப்பில் ஆடியது. அதில் மோதிடாது சுதாரிக்க வேண்டி இருந்தது. மகிழுக்கு ஆச்சரியம். பேராசிரியருக்கு என்றுமே தோட்டக்கலை, பூந்தோட்டச் சமாச்சாரங்களில் ஆர்வம் இருந்ததில்லை. கடந்தமுறை விச்சு வந்திருந்தபோது லவ்பேர்ட்ஸ், கிளிகள், மைனாக்கள் எனக் கூண்டுப் பறவைகளை வாசல்முகப்பில் தொங்க விட்டிருந்ததாகச் சொன்னான். மகிழுக்குத் தெரிந்தவரையில் பேராசியருக்கு எந்த ஜீவராசியிலும் அனாவசியமாய் ஈடுபாடில்லை. அப்போதுபோல் இப்போதும் நம்ப முடியாதவற்றை அவன் பொருட்படுத்தவில்லை.

வாசலில் தொங்கின தேங்காய் அளவிலான வெங்கல மணி வெறும் அலங்காரத்துக்கு என்று பட்டாலும் அதன் நாவைத் தட்டி பார்த்தான். விரல் கூசியது. உலோகத்தின் முனகல் ஒலியின் தொடர்ச்சியாகப் பேராசிரியர் கதவு திறந்தார். "வா" என்றபடி நேராகச் சென்று வரவேற்பறை சோபாவில் அமர்ந்தார். பேராசிரியரின் சாலச்சிறந்த குணமாக அவன் கருதியது அவர் மக்குப் பையன்களுக்கும் சமத்துகளுக்கும் வேறுபாடு காட்டியதில்லை என்பது. ஐந்து வருடப் படிப்பில் இருந்து பத்து வருடங்கள் கழித்தும் அவன் மறக்காத மற்றொரு விசயம் அவர் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண்கள் குலுக்குச் சீட்டுபோல் யாருக்கும் அமைவது. அவர் வினோதமான ஒரு சனநாயகத்தைக் கடைப்பிடித்தார். அதன் கணக்கு புரியாவிட்டாலும் அவரை நாடுவதே அவனுக்கு விருப்பமானதாக இருந்து வந்துள்ளது.

பேராசிரியர் முன்னிருந்த ஆஷ் டிரேயை அவன் வினோதமாய்ப் பார்த்தான். அந்தப் பார்வையை அவர் விரும்ப இல்லை. இடதுகையில் புத்தரது தாமரைபோல் புத்தகம் ஏந்தியிருந்தார்: ஹாம்லெட். சின்ன எழுத்து, வழவழ தாள், கனமற்ற, கையடக்கப் பதிப்பு … எவ்ரிமேன் பதிப்பகச் சின்னம் படபடத்தது.

"உன் அம்மாவைக் காதலித்திருக்கிறாயா எப்போதாவது?"

ரொம்பநேரம் யோசித்து என்ன யோசிக்கிறோம் என்பது கடைசியில் மகிழுக்குப் புரியவில்லை. அவன் அசையவில்லை. பேராசிரியர் புன்னகைத்தார். நல்ல சகுனமாய் அதைக் கொண்டு மகிழ் வந்த விசயத்தை வெளியிட்டான்.

அந்த மங்கலான மஞ்சள் புத்தகங்கள் மற்றும் மரச்சாமான்களின் நிறச்சூழலாக இருக்கலாம்; பழுத்த வாசனை கிளர்த்தின நினைவுகளாக இருக்கலாம். அங்கு அவன் மிகச் சகஜமாக உணர்ந்தான். ஆனால் கைகளின் திடீர் பழுப்பு நிறம் தவிர. அங்குள்ள ஒளிச்சூழலின் விளைவு என்று நம்ப முயன்றான். பழுத்த தாளின் மென்மையைத் தோலில் உணரத் தொடங்கினான்.

"ஆங்கிலத்துறையில் ஓப்பனிங் இருக்கிறது தான். இரண்டு மாதமாகக் காலியாகத்தான் உள்ளது. சரியான ஆள் அமையவில்லை. தேர்வானவர்களும் குறைவான சம்பளம் என்றால் ஓடிப் போய்விடுகிறார்கள்" புன்னகைத்தார் மீண்டும். அப்போது அவரது உதடு பக்கவாட்டு S எழுத்து போல் நெளிந்தது.

"நீ அரியர்ஸ் வைத்திருந்தாய் அல்லவா"

"க்ளியர் செய்துவிட்டேன்"

"உம்"

"ஐந்து வருடமாய் எந்த வேலையிலும் நிலைக்கவில்லை. சாதி ரீதியாய் எல்லா இடத்திலும் நெருக்கடி தருகிறார்கள். உயர்பதவிகளில் எல்லாம் அவர்கள் இருக்கிறார்கள். அதுதான் சார் உங்ககிட்ட வந்தேன். இந்தக் கல்லூரியில்தான் எனக்குப் பாதுகாப்பு கிடைக்கும்."

"எனக்குச் சாதிகளில் நம்பிகை இல்லை."

"போன முறை நிரந்தரப் போஸ்டிங் வந்தபோது லலிதாவுக்கு நீங்கள்தான் வாங்கிக் கொடுத்ததாகச் சொன்னாள்."

முழுப்பல்வரிசையைப் பளிச்சென்று காட்டினார், ஆனால் சிரிக்கவில்லை. ஒரு தினுசான பாவனை.

"சார் நீங்கள்தான் எப்படியாவது…"

முதுகை வளைத்து அவர் காலைப் பார்த்தபடி சொன்னான். அதற்கு மேல் வளையவில்லை.

மேஜையில் இருந்த ஹாம்லெட்டை நாடகீயமாய் விரல் ஊன்றிச் சுழலவிட்டார். அதே தொடர்ச்சியில் "செய்யட்டுமா வேண்டாமா? To be or not to be" என்றார்.

"சார், நான் சிபாரிசுக்காக வரவில்லை; உங்கள் ஆதரவு… தேர்வுக் குழுவில் நீங்கள்தான் எக்ஸ்டெர்னல் என்றார்கள்". மேலும் சற்று வளைந்தான்.

"பார்க்கலாம். உனக்காகப் பேசுகிறேன். ஆனால் பிரின்சிபால் பற்றித்தான் தெரியுமே! He is very particular about qualification. கடுமையான கறாரான மனிதர். உனக்கு எம்.பில். வேறு கிடையாது. அப்புறம் மிஸஸ் யசோதா கோபாலன் HOD, அவரிடம் பேசிவிட்டாயா?"

யசோதாவும் பேராசிரியரும் பரம வைரிகள்.

"இல்லை சார், எனக்கு அவரிடம் போகவேண்டாம்." வேண்டாமை அழுத்தினான். புன்னகைத்தார். இம்முறை மேலும், தெளிவு. அவனுக்கு மேலும் நம்பிக்கை சுரந்தது.

"சரி போய் வா, பார்க்கலாம். லலிதாவிடம் என்னுடைய புத்தகம் ஒன்று உள்ளது. நினைவுபடுத்து."

"சரி சார்."

"காப்பி கீப்பி சாப்புடுறியா…"

"இல்லை சார்."

அவர் தலை அசைத்துவிட்டு உள்ளே எழுந்து சென்றார். அவன் தனியாக வெளியேறினான்.

அழைப்பு மணியைத் தட்டத் தோன்றியது. வாசல் வராந்தாவின் வலதுமுனையில் இருந்து ஒரு கறுப்புநாய் கழுத்துப் பட்டையுடன் மூச்சிரைக்க ஓடிவந்தது. ஒரு தொட்டியைக் கீழே தள்ளி உருட்டியது. அதே ஓட்டத்தில் இடது ஓர மாடிப்படியில் ஏறியது. இவனைப் பொருட்படுத்தவில்லை. மூச்சு திரும்பியது. தன்னைத்தானே முகர்ந்து பார்த்தான். ஒரு புத்தம்புதுத் தாளின் வாசனை. பிறகு அதுவும் இல்லை என்று உணர்ந்தான். "என் வாசனை எங்கே?"

மாலை மொட்டை மாடியில் புறாக் கூட்டம் திட்டுகளாய்ச் சிதறிக் கிடந்தது. ஆவி கிளம்பியது. உலாத்தியபடி மகிழ் ஒத்திகை பார்த்தான். நேர்முகத் தேர்வு ஒத்திகையில் இருந்து மிகக்குறைந்த அளவில் ஆனால் முக்கியமான வகையில் வேறுபட்டது.

"சரி மிஸ்டர் மகிழ்" கல்லூரி முதல்வர் கோப்புகளில் எதையோ தேடியபடி கேட்டார், "ஏன் இத்தனை கம்பனிகள் தாவி இருக்கிறீர்கள்? எங்கேயும் நாலு மாதத்திற்கு மேலாய் நிலைத்ததாகத் தெரியவில்லையே". அவன் வழக்கமான தன் பதிலை ஆரம்பித்தான். அதைப் பிசிறின்றி ஒலிநாடா போல் சொல்லப் பயின்றிருந்தான். பேராசிரியர் பக்கத்தில் இருந்த முதியபெண் பக்கவாட்டில் சாய்ந்து தூங்கினார். ஆனால் மகிழ் பதிலை முடித்ததும் தலையாட்டினார். பேராசிரியர் கேள்விப் பொறுப்பை எடுத்துக்கொண்டார். தொடர்ந்து அவரே கேட்டார். "To be or not to be - இதன் மிச்ச வரிகளைச் சொல்?" அவனது உள்ளுணர்வு சரியாகவே இருந்தது. ஹாம்லெட்டில் இருந்து தான் தயாரித்து வைத்திருந்த வரிகளை ஒப்பித்தான். முதல்வர் கண்களில் ஒளி தெறித்தது. ஆனால் அடுத்த கேள்வி அவனைத் தடம் புரட்டியது.

"ஷேக்ஸ்பியர் தனது சானெட்டுகளில் குறிப்பிடும் அந்தப் புரவலர் யார்?"

அவன் மேலும் சற்று பொறுத்துப் பார்த்தான். தவறிக் கேட்டுவிட்டாரா அல்லது அடுத்த நபருக்கான கேள்வியா? பேராசிரியரின் பூனைக்கண்கள் அவனை முறைத்தன. அவரது இடது இமை விடாமல் துடித்தது. கண்ணாடியை துடைத்துக்கொண்டு அடுத்துக் கேட்டார். அவனது குளறுபடி பதில்களை அல்லது மௌனங்களைப் பொருட்படுத்தாது கேட்டபடியே இருந்தார். கண்ணாடி கழற்றத் தெரிந்த அவரது பளபளக்கும் கண்களையே மகிழ் யோசித்தபடி இருந்தான். அனாதி காலத்துக்கு முற்பட்ட வேட்டை மிருகக் கண்கள். அக்கண்கள் அவன் வயிற்றுக்குள் உருண்டு துருவின,

"செமியாட்டிக்ஸின் தந்தை யார்?"

"---"

"சரி. மிக எளிதான ஒரு கேள்வி. சி.ஐ.சி. கலைக்கல்லூரி மாணவன் என்ற முறையில் கட்டாயம் உனக்கு இதற்குப் பதில் தெரியவேண்டும்"
சுற்றுமுற்றும் அயர்ந்திருந்த முகங்கள் அசைந்து ஆமோதித்தன. முகத்தில் ரோமங்கள் கொண்ட ஒரு பெண்மணி வழமையான தாழ்வுணர்வு தோன்றப் புன்னகைத்தார். இடுப்பு மடிப்பில் மூன்று மருக்கள். அவரை எப்போது முதலில் பார்த்தான் என்பது நினைவில்லை.

"புத்திஜீவிகளின் குழுவிடம் ஒரு ஒட்டகம் சென்றால் திரும்பி வரும்போது அது குதிரை ஆகிவிடும். இதன் பொருள் என்ன?"

"உண்மைக்கும் பொய்க்கும் ஆன நுட்பமான இடைவெளியைப் பற்றின…"

குறுக்கிட்டார்: "No... no... தத்துவத்துக்கு எல்லாம் செல்லாதே…"

"அதாவது குதிரையை நாம் ஒட்டகமாகப் பார்த்தோமானால்..." அதற்குமேல் விக்கித்தான். ஓடிவிட்டால் என்ன?

"ரொம்ப ஸிம்பிள் பா, language is arbitrary… அவ்வளவுதான்."

முகத்தில் சற்றுக் கருணை தெரியும்போது எல்லாம் கையில் நெல்லிக்காய் வைத்திருப்பது போல் உருட்டினார். தொடர்ந்து கேள்விகள் உருள தேர்வுக் குழுவினர் ஒவ்வொருவராய் விழித்துக் கொண்டனர். பலரது விழிகளைச் சுற்றிலும் சுருக்கங்கள். பச்சாதாபம், வெறுமை, உறுதியற்ற வெறுப்பு. ஒருவர் தைரியமாக விழிகளை மீண்டும் மூடினார். பேராசிரியரைத் தவிர யாரும் அவன் கண்களைச் சந்திக்க முற்படவில்லை. விழித்தவர் பார்வைகள் வாசலை நோக்கி நிலைத்தன. பேராசிரியர் நிறுத்திக் கொண்டதும் குறிப்பு அட்டையில் இருந்து முதல்வர் நிமிர்ந்தார். மகிழ் அனைவருக்கும் நன்றி சொல்லி தன் விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும்படி கழுத்தை வளைத்து வேண்டினான். பரவலான ஆமோதிப்புப் புன்னகை மற்றும் உற்சாகமான ஒத்திசைவு, தலையாட்டல். மகிழுக்கு முதல்முறையாக மனிதர்கள்பால் நம்பிக்கை ஏற்பட்டது. ஒருவர் எழுந்து கதவுகூடத் திறந்து விட்டார்.

நேர்முகத் தேர்வு முடித்து வந்தவரிடம் மகிழ் தேனீர்க்கடையில் உரையாடினான். நேர்முகத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் பற்றி விசாரித்ததில் யாரிடமும் விலாவரியாய் கேட்கப்படவில்லை என்று அறிந்தான். பெரும்பாலும் அப்பா, அம்மா, கல்விப் பின்னணி போன்ற கேள்விகளே. வந்தவர்களில் ஒருவர் மட்டும் பெண்பால். சற்றுக் குள்ளமாய்க் கூரிய மூக்கு, குறுகிய இடையுடன் தெரிந்தாள். அவளை நோக்கும் அனைவரின் பார்வையிலும் ஒரு தாலாட்டுத் தெரிந்தது. இந்தச் சந்திப்பில் மகிழுக்கு நிறைய நண்பர்கள் வாய்த்தார்கள். "வேலை உங்களுக்கே கிடைக்கட்டும்" என்று அவனை வாழ்த்தினார்கள். அவனுக்கு ராஜ்குமாரை அதிகம் பிடித்திருந்தது. பிற்பாடு பலமுறை சந்தித்துக் கொண்டார்கள். இருவருக்கும் ஒரே எண்ண அலைகள். குறிப்பாய் வேலை என்பது வீண்சுமை என்று நம்பினார்கள்.

"அந்தப் பாப்பாவுக்குத்தான் கண்டிப்பா கொடுப்பாங்க" என்றான் ரா.குவிடம், உதட்டில் நுரை படிய கண்ணாடிக் கோப்பையை ஆட்டியபடி.

"அவருக்குக் கிறித்துவர்கள் என்றால் பிடிக்காது."

மகிழ் இதைச் சொன்னதும் ரா.குவின் கண்கள் பளிச்சிட்டன. அவன் கிறித்துவன்.

"அதோட சாருக்குப் பெண்கள் மீதான பலவீனத்தையும் கணக்கிடும்போது… அந்தச் சோன்பப்டிக்கு தான் வாய்ப்புன்னு தோணுது."

ரா.கு. புன்னகைத்தான். உரையாடல் அப்பெண்ணில் முடியும்போது அவர்கள் வழக்கமாய் ஆசுவாசித்தனர். அது ஒரு பிரியமான முற்றுப்புள்ளியாக எப்போதும் அமைந்தது.

மகிழ் அடுத்துப் பங்கேற்ற நேர்முகங்களில் எளிய அறிமுகக் கேள்விகள் கேட்கப்பட்டுச் சுறுசுறுப்பாகச் சம்பள பேரத்துக்கு நகர்ந்தார்கள். முக்கியமான கேள்வி: "இதுதான் நாங்க வழக்கமா தரது, ஓ.கேயா?"

இரண்டு இடங்கள் ஓ.கேயாகி, ஒவ்வொரு இடத்திலும் ரெண்டு, மூன்று மாதங்களுக்கு மேல் அவனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. மேலாண்மைக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்று மோப்பம் கிடைத்ததும் காரணம் சொல்லாது கிளம்பினான். "உனக்கு ஏற்ற வேலைதான் என்ன?" என்று உறவினர்கள், நண்பர்கள், பரிச்சயக்காரர்கள், கடன் தந்தவர்கள், புதிய அறிமுகங்கள் கேட்டார்கள். எளிய பதில்கள் தர பிரயாசைப்பட்டான். பதில்கள் கண்டுபிடிப்பதற்கு மற்றொரு வேலை முயலலாம் என்று அப்போதுதான் முடிவெடுத்தான்.

ஒரு பிரபலமான ஊடகக் குழுமத்தினர் நடத்தும் எஃப்.எம். மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் காலியிடங்கள் உள்ளதாய் தெரிய வந்தது. குழுமத்தின் முக்கியப் பொறுப்பாளர்கள் பேராசிரியருக்கு நெருக்கமானவர்கள். ஒரு தொலைபேசி அழைப்பு போதும். வேலை நிச்சயம். பேராசிரியரை மீண்டும் அணுகினான். அப்போதுதான் அது நடந்தது. அதற்குப் பின் அவன் இதுவரையில் சொன்னதுபோல் யோசிக்கவில்லை.

தொலைபேசியில் பேராசிரியர் குரலில் கோபம் ஆறியிருக்கவில்லை. ‘அன்னிக்கு எல்லாக் கேள்விகளுக்கும் முன்கூட்டியே பதில் சொல்லித் தரல்ல? ஆனா நீ நேர்முகத்தில் சொதப்பி என் மானத்த வாங்கிட்ட." மகிழ் மறுத்துரைக்கவில்லை. உண்மைகள் மீது சுவாரஸ்யம் இழந்திருந்தான். வீட்டுக்கு வரச்சொன்னார். "பார்க்கலாம்" என்று பட்டென்று வைத்தார். சனிக்கிழமை செல்வதாய் முடிவு.

இம்முறை அவன் துணைக்கு ரா.குவை அழைத்தான். அன்று நடந்த நேர்முகத்தில் சி.ஐ.சி. கலைக்கல்லூரியில் அவனுக்கு வேலை கிடைத்ததாய் அவன் சொன்னான். மகிழ் அதற்கு மேல் உரையாடலை வளர்க்கவில்லை. ஆனால் ரா.கு. ஆங்கிலத்தில் தொடர்ந்தான்: "என் பெயரால் உன் பேராசிரியர் குழம்பியிருக்க வேண்டும். என் அப்பா அந்தப் பிரபல கன்னட நடிகரின் பெரிய விசிறி. அப்படி அவர் இட்ட பெயரால் நான் முதன்முறையாகப் பயனுற்றிருக்கிறேன். இதுவரை இந்தப் பெயரை எப்படி வெறுத்திருக்கிறேன் தெரியுமா?" புன்னகையுடன் சிகரெட் புகையைப் பிசிறு பிசிறாய் வெளியிட்டான்.

சனிக்கிழமை மாலை. பேராசிரியர் வீட்டு முற்றத்தில் பல வினோதமான தாவரத் தொட்டிகள் புதிதாக நின்றன. ஏறத்தாழ வாசலை மறித்தன. குறுக்கு நெடுக்காக எறும்புகளின் சாரிகள் வேறு. இறந்த சிறு உடல் உறுப்புகளைக் கலவரமின்றிச் சுமந்து சென்றன. வாசலில் கிடந்த நாய் பற்களைக் காட்டி உறுமினதால் மேற்கொண்டு வர ரா.கு மறுத்தான். நாய் மகிழைப் பொருட்படுத்தவில்லை. அதன் கவனம் எறும்புகள் மீது இருந்தது. வால் காற்றுக்குத் தன்னிச்சையாக விசிறியது. அதில் எறும்புகள் சில பறந்தன. வெண்கல மணியின் நாவைக் காணவில்லை.

"சார்"

வரவேற்பறையில் சிறுசிறு மாற்றங்கள். குறிப்பாய் இடது சுவர்மீது ஒரு நவீன ஓவியம் பெரிதாய். சிவப்புப் பின்னணி. ஒரு பெரிய கண்மட்டும் கொண்ட பெண் முகம். முகக் கோட்டுக்கு வெளியே செம்பரப்பு அலையாடியது. அவன் பார்க்க உயிர்ப்பின் சலனம்.

ஓவியத்தின் நேர் எதிரே உள்ளறையின் திரை திறந்து இருந்தது. அங்கு மேலும் சன்னமாக வெளிச்சம். எட்டிப் பார்த்தான். சோபாவில் பேராசிரியர் சாய்ந்து கிடந்தார். வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட். எதிரே டீபாயில் ஒரு கண்ணாடிக் கிண்ணம். அதில் நிறமற்ற கொழகொழ திரவத்தில் உலோகக் கண்கள். ஒளியின் ஊடாடல் அடிக்கடி அவனை நோக்கி வெட்டி அடித்தது.

ஒரு விகாரமான சாவைப் பார்த்தது போன்ற அதிர்ச்சி மற்றும் ஒவ்வாமையில் மகிழ் திரும்பி ஓடினான். பாதி நடை பாதித் தாவல். அந்த வீட்டின் ஒவ்வொரு பொருளும் அவனை உத்தேசமற்றுத் திரும்பிப் பார்த்தன. வாசலை நெருங்கிய போது நாயை மிதித்திருப்பான் – பேராசிரியரின் குரல் ஒரு பனிமூட்டம் போல், மழையின் சிறகுகள் போல் பின் எழுந்தது; அவனை அணைத்தது. நடுக்கமுற்ற, சொற்களை அசை அசையாய் உச்சரிக்கும் அதே குரல். அக்குரல் அவனை நிதானமடைய வைத்தது. நரம்புகளின் இறுக்கம் தளர்ந்தது. மிக சகஜமாகக் கட்டுப்படுத்திச் செலுத்தியது. அரூபமாய் அவனைத் தொடர்ந்து பேசிக்கொண்டு வந்தார். பேச்சு என்பதைவிடப் பித்து மனதின் சொல் ஒழுங்கு. அவனுள் புகுந்து ஒரு வாசனையைக் கிளர்த்தியது. வேறெப்போதும் புலப்பட்டிராதபடி அது மிகக் கூர்மையாக இருந்தது. அது தன் சொந்த வீடு என்பதாக உணர்ந்தான்.

பேராசிரியர் உடனான இறுதிச் சந்திப்பாக அது அமைந்தது. அவனுக்கு வேலை கிடைத்தது; பல வருடங்கள் அவன் நிலைத்த வேலை.

ஆர். அபிலாஷ்
Share: 




© Copyright 2020 Tamilonline