கர்நாடிக் சேம்பர் கான்செர்ட்ஸ் வழங்கிய பஞ்சரத்ன கீர்த்தனைகள்

மார்கழி மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது கர்நாடக சங்கீத சீஸன், பட்டுப் புடவைகள், காண்டீன் மெனு. அதற்கெல்லாம் முத்தாய்ப்பாகத் திருவையாற்றில் தியாகராஜ ஆராதனை. அத்தனைக் கலைஞர்களும் சேர்ந்து பஞ்சரத்ன கிருதிகளை பாடக் கேட்பது அலாதி சுகம்.

கடல்கடந்து வாழும் நமக்கு சங்கீத சீசனைப் பற்றிப் படிக்கும்போது ஒரு ஏக்கப் பெருமூச்சுதான் வரும். அதைப் போக்குவதற்கென்றே புத்தாண்டில் விரிகுடாப் பகுதியில் ஜனவரி 2, 2010 அன்று மில்பிடாஸ் நூலகத்தில் கர்நாடக அரங்கிசை ஒன்று நடந்தது. பட்டுப் பாவாடைப் பெண்களும் ஜிப்பா பையன்களும் அமெரிக்க உச்சரிப்பில்லாமல் மயிலாப்பூரில் இருப்பது போல் பஞ்சரத்ன கிருதிகளை அட்சரம் பிசகாமல் பாடினர்.

கர்நாடிக் சேம்பர் கான்செர்ட்ஸ் (CCC) என்ற அமைப்பு ஒரு வருடமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. கர்நாடக இசையை இளைஞர்களிடையே வளர்க்கவும் அவர்களை ஊக்குவிக்கவும் இது அமைக்கப்பட்டது. பத்மா மோகன், கனகா குருபிரசாத் போன்றோர் இணைந்து ஏற்படுத்தியது. ஒவ்வொரு மாதமும் கச்சேரி நடத்தி, கர்நாடக இசை பயிலும் குழந்தைகளை மேடையேற்றுகிறது. CCC-யின் முதல் ஆண்டுக் கொண்டாட்டமாகத் தான் அன்று பஞ்சரத்ன கிருதிகளை சிறுவ சிறுமியர் பாடினர்.

நிகழ்ச்சி முடிவு வரை தொய்வில்லாமல் சென்றது. அது போதாதென்று சுடச்சுட டீயும் சாண்ட்விச்களும் சமோசாக்களும் சபா காண்டீன்களை ஞாபகத்துக்கு கொண்டு வந்தன.

மேலும் விவரங்களுக்கு: ChamberConcerts@yahoo.com

பாலாஜி ஸ்ரீனிவாசன்,
ஃப்ரீமாண்ட்.

© TamilOnline.com